தமிழிசையை அடிக்க பாய்ந்த நபர்! மயிலாப்பூர் பூத்தில் திடுக் சம்பவம்.. என்னாச்சு?
சென்னை: சென்னை மயிலாப்பூர் சட்டசபை தொகுதியில் பாஜக வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் மயிலாப்பூர் 13ம் எண் பூத்தில் அவரிடம் வம்பிழுத்து ஒருவர் அடிக்க பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை மயிலாப்பூர் சட்டசபை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். இன்று வாக்குப்பதிவு தொடங்கியதும் அவர் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு பூத்தாக சென்று பார்வையிட்டார்.

அப்போது மயிலாப்பூர் சட்டசபை தொகுதியின் 13ம் எண் பூத்தில் தமிழிசை சவுந்தரராஜன் சென்றார். அப்போது பூத் அருகே தமிழிசை சவுந்தராஜனுக்கும், இன்னொருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
தமிழிசையை அடிக்க பாய்ந்த நபர்
இதில் டென்ஷனான அந்த நபர் தமிழிசை சவுந்தராஜனை அடிக்க பாய்ந்தார். இதையடுத்து அங்கிருந்த போலீசார் மற்றும் மற்றவர்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தி அவரை அப்புறப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அந்த நபர் திமுகவை சேர்ந்தவர் என்று பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழிசை ஷாக் பதிவு
இதுபற்றி தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், ''மயிலாப்பூர் 13ம் எண் பூத்தில்... திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபட்டு இருந்தனர். அதை தட்டி கேட்டதற்கு நம்மை தாக்க பாய்ந்தனர். அராஜகத்தினால் நிச்சயமாக ஓங்கி ஒலிக்கும் நம் குரலை அடக்கி விட முடியாது. பொதுமக்களுக்காக இந்த குரல் ஓங்கி ஒலிக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
திமுக மீது குற்றச்சாட்டு
மேலும் இந்த சம்பவம் பற்றி தமிழிசை சவுந்தராஜன் அளித்த பேட்டியில், ''ஓட்டுப்போட வருகிறேன் என்று திமுகவினர் வரிசையில் நின்று 'கேன்வாஸ்' செய்து வருகின்றனர். ரொம்ப நேரமாக அவர்கள் அங்கேயே நிற்கின்றனர். திமுகவின் சின்னம் மற்றும் திமுக கொடியின் நிறத்தை பிரதிபலிப்பதை வைத்து கொண்டு சுற்றி வருகின்றனர். இது 2வது தவறு. அடையாள அட்டை இல்லாமல் சிலரை ஓட்டுப்போட வைத்துள்ளனர்.
அநீதியை எதிர்த்து வெற்றி
இது என்ன என்று கேட்டதற்கு திமுகவின் ஏஜெண்ட் வெளியே வந்து பேட்டியளிக்கிறார். பூத் ஏஜெண்ட் எப்படி பேட்டி அளிக்க முடியும்? அடையாள அட்டை இன்றி யாரெல்லாம் ஓட்டுப்போட்டனர்? என்பது பற்றி விசாரிக்க வேண்டும். இதுபற்றி தலைமை தேர்தல் அதிகாரிக்கு தொலைபேசி வழியாக புகார் அளிக்க உள்ளேன்.
அநீதி எங்கு நடந்தாலும் அங்கு எனது குரல் ஒலிக்கும். பெண்களை அடக்கி ஆளலாம் என்று யாரும் நினைக்க கூடாது. அநீதியை எதிர்த்து போராடி வெற்றி பெறுவோம். திமுகவிற்கு எச்சரிக்கை செய்கிறேன். நீங்கள் முறைகேடு செய்து வெற்றி பெறலாம் என்று நினைக்காதீர்கள்'' என காட்டமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications