உஷாரய்யா உஷாரு! சென்னையில் வீடு பாக்குறீங்களா? மொத்தமாய் ஆட்டைய போடும் ‘சதுரங்க வேட்டை’ கும்பல்!
சென்னை : சென்னை அருகே கொடுங்கையூரில் அடுத்தவர் வீட்டை வாடகைக்கு விடுவது போல நடித்து இரண்டு லட்சம் ரூபாய் ஏமாற்றிய பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் ஒரே வீட்டை காண்பித்து ஏழு பேரிடம் 36 லட்சம் ரூபாய் ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது.
சென்னை கொடுங்கையூர் அம்பிகா நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் 29 இவர் மேற்கண்ட விலாசத்தில் தனது மனைவி மற்றும் தனது நான்கு மாத குழந்தை வயதான மாமியார் மாமனார் உடன் வசித்து வருகிறார்.
இவர்கள் வேறு வீடு லீசுக்கு போக வேண்டும் என முடிவு செய்து ஆன்லைன் மூலம் வெப்சைட்டில் விளம்பரம் கொடுத்திருந்தார். அவரது விளம்பரத்தை பார்த்து கோபி மகாராஜா என்பவர் தொடர்பு கொண்டு கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 132 வது தெரு பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.

சொந்தமான வீடு
மணிகண்டன் அங்கு சென்று பார்த்தபோது கோபி மகாராஜா மற்றும் அவரது மனைவி மகன் உள்ளிட்டோர் வீட்டில் இருந்துள்ளனர் அவர்கள் மூவரும் மணிகண்டனிடம் முத்தமிழ் நகர் 3வது தெரு காவேரி சாலை பகுதியில் தங்களுக்கு சொந்தமான வீடு உள்ளது அதனை ஐந்து லட்சம் ரூபாய்க்கு லீசுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளனர். முன்பணமாக 2 லட்சம் ரூபாய் பேசி முடிக்கப்பட்டு ஒரு லட்சம் ரூபாய் காசோலையாகவும் மீதி ஒரு லட்சம் ரூபாய் பணமாகவும் மணிகண்டன் கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி கொடுத்துள்ளார்.

மோசடி
ஆனால் அவர்கள் கூறிய தேதியில் வீடு ஒப்படைக்கப்படவில்லை. இதனால் கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி அவரது வீட்டிற்கு சென்று இது குறித்து கேட்டபோது வீட்டில் இருந்த கோபி மகாராஜா கத்தி மற்றும் துப்பாக்கியை காண்பித்து மணிகண்டனையும் அவர் உடன் சென்ற நபரையும் மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து இது குறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் இது குறித்து விசாரணை செய்தனர்.

போலீசார் விசாரணை
போது கோபி மகாராஜா மோசடியாக ஆன்லைனில் வீடு தேடுபவர்களை குறி வைத்து ஏமாற்றியதும் அவர் குறிப்பிட்ட முகவரியில் சொன்ன வீடு அவருடைய வீடு இல்லை என்றும் தெரிய வந்தது மேலும் அவர் துப்பாக்கியை காண்பித்து மிரட்டியதாக புகார் இருந்ததால் இது குறித்து விசாரணை நடத்திய போது அது சிகரெட் பற்ற வைக்கும் லைட்டர் மாடல் துப்பாக்கி டம்மியானது என்பதும் தெரிய வந்தது. கோபி மகாராஜா காண்பித்த வீடு கோவிலம்பாக்கம் நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்த குமார் வயது 42 என்பவருக்கு சொந்தமானது என்பதும் குமாரிடமிருந்து வீட்டை லீசுக்கு வாங்கி அதனை வாடகைக்கு விடாமல் அந்த வீடை காண்பித்து பல பேரை இவர் ஏமாற்றி வந்தது தெரிய வந்தது.

சிக்கிய எப்படி?
மேலும் கோபி மகாராஜா உடன் இருக்கும் நபர் அவரது மனைவி கிடையாது என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் கோபி மகாராஜாவின் மனைவி எனக் கூறிய அம்பிகா, அவரது மகன் பிரவீன் ராஜ் மற்றும் அந்த வீட்டை லீசுக்கு விட்ட குமார் ஆகிய மூன்று பேரையும் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய குற்றவாளியான கோபி மகாராஜா என்பவர் தலைமறைவாகியுள்ளார். குறிப்பிட்ட கொடுங்கையூரில் உள்ள அந்த வீட்டை காண்பித்து இதுவரை ஏழு பேரிடம் 36 லட்சம் ரூபாய் வரை இவர்கள் ஏமாற்றியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து கொடுங்கையூர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications