ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு
சென்னை: ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆவின் பால் விலை கடந்த 19-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டது. கொள்முதல் விலை அதிகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது.
இதையடுத்து ஆவின் பால் நிர்வாகம் புதிய பட்டியலையும் வெளியிட்டது. அதில் 500 மில்லி லிட்டர் ஆவின் பால் நீலநிறம் ரூ. 20-ஆகவும் பச்சை நிற பாலின் விலை 22.50-ஆகவும் ஆரஞ்ச் நிறத்தின் விலை 24.50 ஆகவும் உயர்த்தப்பட்டது.
இதனால் தயிர், மோர், நெய், வெண்ணெய் ஆகியவற்றின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி ஆவின் பால் விலை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் ஆவின் பால் ஒரு லிட்டருக்கு 6 ரூபாயாகவும் பசும் பால் லிட்டருக்கு 4 ரூபாய் விலை உயர்த்தபட்டது. பசும்பால் 28 ரூபாயிலிருந்து 32-ஆகவும் ஆவின் பால் 38 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளதாக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.
எனவே இந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். இந்த பால் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் திங்களன்று நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது