அமைச்சரவை இலாகா ஒதுக்கும் முன்பு முதல்வர் ஸ்டாலின் என்னிடம் கேட்ட கேள்வி..மனம் திறந்த துரைமுருகன்
சென்னை: நான் ஒரு விவசாயி மகன் எனக்கு நீர்வளத்துறை மிகவும் பிடித்த துறை என்று அமைச்சர் துரைமுருகன் வேளச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போது கூறினார். மேலும் அமைச்சரவை இலாகா ஒதுக்கப்படும் முன்பாக தன்னிடம் முதல்வர் மு.க ஸ்டாலின் ஒரு கேள்வி கேட்டதாகவும் கூறினார்.
சென்னை தெற்கு மாவட்ட வேளச்சேரி திமுக சார்பில் மறைந்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
வேளச்சேரி காந்தி சாலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், மா.சுப்ரமணியன், எம்.பி ஜெகத்ரட்சகன் உள்பட பலரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கூறியதாவது;-

மனம் திறந்த துரைமுருகன்
கருணாநிதி முதல்வராக இருந்த போது என்னிடம் பல துறைகள் இருந்தன. அதில் நீர்வளத் துறையை மட்டும் எனக்கு அதிகம் பிடித்த துறையாக வைத்திருந்தேன். ஏனெனில் நான் ஒரு விவசாயின் மகன். அதனால் நீர்வளத்துறை எனக்கு பிடித்தது. நான் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை கருணாநிதி அறிவித்தார். மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இலாகா ஒதுக்கும் போது என்னிடத்தில் எந்த துறை வேண்டும் என்று கேட்டார்.

காந்தியடிகளை கேலி பேசுகிற ஆட்சி
நான் நீர்வளத்துறைதான் வேண்டும் என்று கேட்டு வாங்கினேன். ஒரு கட்சியின் தலைவராக 50 வருட காலம் தொடர்ந்தது உலகத்துலேயே ஒரே தலைவர் கருணாநிதிதான். அகிம்சை வழியில் போராடி சுதந்திரத்தை பெற்று தந்த காந்தியடிகளை கேலி பேசுகிற ஒரு ஆட்சி வந்துள்ளது. காந்தியை பற்றி கேவலம் பேசுகிறார்கள். பண்டிதர் ஜவகர்லால் நேரு மிகப்பெரிய பணக்காரர் வீட்டில் பிறந்தவர். பல தியாகம் செய்த அவரை கேவலமாக பேசுகிறார்கள்.

எட்டப்பனுக்கு இங்கு வேலை இல்லை
அற்பத்தனமான ஒரு காரியத்தை மத்திய ஆளும் கட்சியில் உள்ள சில தொண்டர்கள் இங்கு செய்கிறார்கள். ஆனால் திமுக தியாகத்தை மதிக்கின்ற கட்சி, தியாகம் புரிகிற கட்சி. இங்கு உழைப்பவனுக்கு மாலை இடுகிற கட்சி. துரோகத்தை இந்த நாட்டில் வளரவிடலாம் என கருதுபவனானால் தியாகம் புரிந்த இந்த மண்ணில் எட்டப்பனுக்கு இங்கு வேலை இல்லை" என்றார்.

ரூ. 165 கோடியில்
முன்னதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாசுப்ரமணியன் பேசினார். அவர் பேசுகையில், " சுமார் ரூ. 165 கோடியில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, ஒட்டியம்பக்கம் பெரும்பாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் வடிகால் வசதி மேற்கொள்ளப்பட்டது. இதனால், எப்பொழுதும் மழையால் அதிகளவு பாதிக்கப்படக்கூடிய அந்த பகுதி கடந்த மழையில் சிறிதளவு கூட பாதிப்பு இல்லாமல் அந்த பகுதி காப்பாற்றப்பட்டுள்ளது" என்றார்.

கவிதை மழையில் புகழாரம்
அதேபோல், திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் பேசும் போது தனக்கே உரிய பாணியில் கவிதை மழையில் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். ஜெகத்ரட்சகன் பேசுகையில், "10 கோடி தமிழர்களை மட்டுமா ஆளுகிறார்.. ஐம்பூதங்களையும் கட்டி ஆளுகிறார். மழை வேண்டுமென்றால் வருகிறது, அனைவரும் பயந்தோம் புயல் வந்தது.. தளபதியை பார்த்தது.. புல்லாங்குழல் ஊதிவிட்டு சென்றது" என புகழ்ந்தார்.












Click it and Unblock the Notifications