தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை-முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு பற்றி ஆணையத்திடம் ஆ. ராசா விளக்கம்
சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறி தாம் பெண்களைப் பற்றி கண்ணிய குறைவாக எதுவும் பேசவில்லை என்று தேர்தல் ஆணையத்திடம் திமுக துணைப் பொதுச்செயலாளரும் லோக்சபா எம்.பி.யுமான ஆ. ராசா எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஆ. ராசா முன்வைத்த விமர்சனங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அரசியல் வளர்ச்சி பற்றி ஆ. ராசா ஒப்பீடாகப் பேசிய பேச்சுதான் பெரும் விஸ்வரூபம் எடுத்தது.
இந்த சர்ச்சை பேச்சால் பிரசாரத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்ணீர் வடித்தார். இதனையடுத்த் ஆ. ராசா தமது பேச்சுக்கு பகிரங்க வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
தேர்தல் ஆணையம்- ஆ. ராசா பதில்
இதனிடையே ஆ. ராசா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அத்துடன் தேர்தல் ஆணையமும் ஆ. ராசாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸுக்கு ஆ. ராசா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
ஒப்பீடு- உவமையணி
அதில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி கண்ணியக் குறைவாக எதனையும் நான் பேசவில்லை. தமிழ் இலக்கணத்தில் உவமையணி என்பது உள்ளது. அதனடிப்படையில் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோரது அரசியல் வளர்ச்சியை ஒப்பிட்டுதான் பேசினேன்.
திரித்து பரப்பும் அதிமுக-பாஜக
ஆனால் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக அதிமுகவினர் பாஜகவினர் திரித்து பரப்புகின்றனர். மேலும் அதிமுகவினர் என் மீது என்ன புகார்களை தெரிவித்திருக்கின்றனர் என்பது முழுமையாக தெரிந்தால்தான் என்னால் விளக்கம் தரவும் இயலும். ஆகையால் அந்த புகார் விவரங்களை முழுமையாக்க எனக்கு தர வேண்டும்.
வீடியோவில் முழு விவரம்
என்னுடைய பேச்சின் வீடியோ பதிவை முழுமையாக கேட்டால்தான் நான் என்ன பேசினேன் என்பதும் தெரியவரும். இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் தரவும் தயாராக இருக்கிறேன் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய விளக்கத்தில் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.