போச்சே.. நைஸாக வந்து சைஸாக நெக்லஸை திருடி சென்ற எலி.. பதறிய நகைக்கடை..ஐபிஎஸ் அதிகாரி ஷாக் வீடியோ
கேரளாவில் உள்ள நகைக்கடையில் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்த நெக்லஸை எலி ஒன்று திருடி சென்றது சிசிடிவியில் பதிவாகி உள்ளது. தற்போது இது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை: இந்தியாவின் பல இடங்களில் நகைக்கடைகளில் நுழைந்து ஊழியர்களை மிரட்டி கட்டிப்போட்டு கொள்ளையடித்த சம்பவங்களை நாம் கேள்வி பட்டு இருப்போம். இல்லாவிட்டால் நகைக்கடை சுவரில் துளையிட்டு நகைகளை அபேஸ் செய்த கும்பல் பற்றி நாம் அறிந்து இருப்போம். ஆனால் முற்றிலும் மாறாக எலி ஒன்று நகைக்கடையில் காட்சிப்படுத்தப்பட்ட நெக்லஸை திருடி இருக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ஆம், நீங்கள் படித்தது சரிதான். எலி தான் இந்த செய்தியின் ஹீரோவாக இருக்கும் வில்லன். அதாவது ஒரு எலி நகைக்கடையில் இரவோடு இரவாக யாரும் இல்லாத நேரத்தில் சுற்றும் முற்றும் பார்த்து யாரும் இல்லாததை உறுதி செய்து சத்தமே இல்லாமல் நெக்லஸை திருடி சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்த கேமரா பதிவின் வீடியோ தான் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சாமானியர்கள் முதல் ஐபிஎஸ் அதிகாரிகள் வரை ஏராளமானவர்கள் இந்த வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
ஒருங்கிணைந்த அதிமுக, இரட்டை இலை சின்னம்.. தமிழ்நாட்டில் நினைத்ததை சாதிக்கும் பாஜக!
ஐபிஎஸ் அதிகாரி பகிர்ந்த வீடியோ
மத்திய பிரதேச மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ராஜேஷ் ஹிங்கான்கர். இவர் தற்போது இந்தூர் நகர குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனராக செயல்பட்டு வருகிறார். இவர் தான் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் நகைக்கடையின் சீலிங்கில் இருந்து எலி ஒன்று வேகமாக வருகிறது. அதன்பிறகு சில வினாடிகள் அப்படியே நெக்லஸை பார்க்கும் எலி நகைக்கடையில் காட்சிப்படுத்தும் வகையில் வைத்திருந்த வைர நெக்லஸை வாயால் கடித்து கொண்டு அங்கிருந்து வேகமாக ஜம்ப் செய்து ஓடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வீடியோவில் இருப்பது என்ன?
மொத்தம் 30 வினாடிகள் நீளம் கொண்ட இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் ஹிங்கான்கர், ‛‛இந்த எலி யாருக்காக வைர நெக்லைஸ எடுத்திருக்கும்'' என்ற வினாவையும் எழுப்பியுள்ளார். இந்த வீடியோவை தற்போது பலரும் ஷேர் செய்து வருகின்றனர். மேலும் ஏராளமானவர்கள் வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருவர், ‛‛திருட்டு.. அனைத்து இனங்களுக்கும் பொதுவானது'' என கருத்து தெரிவித்து உள்ளார். இன்னொருவரோ, ‛‛எலிகளும் நெக்லஸ் அணியுமோ'' என வினா எழுப்பி உள்ளதோடு, மற்றொருவரோ, ‛‛இந்த எலி சிக்கினால் எத்தனை ஆண்டுகள் தண்டனை வழங்குவீங்க'' எனவும், இன்னொரு நெட்டிசன், ‛‛பிப்ரவரி 14 காதலர் தினத்துக்கு எலி தயாராகிறது போல'' என வேடிக்கையாக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
எங்கு நடந்தது?
இது ஒருபுறம் இருக்க சம்பவம் எங்கு நடந்தது? என்ற கேள்வியையும் பலரும் எழுப்பி வருகின்றனர். இதற்கு பலரும் கேரளா மாநிலம் காசர்கோட்டில் உள்ள நகைக்கடையில் இந்த சம்பவம் நடந்ததாகவும், நெக்லஸை காணாமல் நகைக்கடை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் சிசிடிவியை சோதித்தபோது உண்மை தெரிந்ததாகவும் தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவில் நடந்ததா?
இருப்பினும் கூட நெக்லஸை எலி திருடி சென்ற சம்பவம் கேரளாவில் நடந்ததா? இல்லை வேறு எங்கும் நடந்ததா? என்பது பற்றி அந்த ஐபிஎஸ் அதிகாரி எந்த தகவலையும் பகிரவில்லை. இருப்பினும் கூட நெக்லஸை எலி திருடும் அவரது வீடியோவை பலரும் ட்விட்டரில் பகிர்ந்து வருவதோடு, ஜாலியாக பகிர்ந்து வருகின்றனர்.