எங்கே போனார்? அதிமுக "டாப்" தலைகளை தேட வைத்த மூத்த மாஜி.. ஆஹா ஆளையே காணோமாமே.. என்னாச்சு?
சென்னை: அதிமுகவை சேர்ந்த முக்கிய மாஜி அமைச்சர் ஒருவர் பெரிதாக ஊடகங்களில் தோன்றாமல் ஒதுங்கியே இருக்கிறாராம். அவரின் இந்த திடீர் அமைதி அதிமுக கட்சியினர் இடையே விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
நெருப்பு இல்லாமல் புகையாது என்பார்கள். அதிமுகவில் ஏற்பட போகும் மிகப்பெரிய நெருப்பிற்கு முன்பாக தற்போது புகைச்சல் ஏற்பட தொடங்கி உள்ளது. உட்கட்சி பூசல் காரணமாக பல்வேறு மூத்த நிர்வாகிகள் சைலன்ட் மோடிற்கு சென்று உள்ளனர்.
முக்கியமாக அதிமுகவின் அடையாளமாக இருந்த ஒரு சிலர் அப்படியே போனை சைலன்ட் மோடில் போட்டுவிட்டு மாயமாகி உள்ளனர். அப்படி என்னதான் நடக்கிறது?
திருவாரூரோ திருவள்ளூரோ.. உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவேன்.. சவுக்கு சங்கர் அதிரடி
அதிமுக பொதுக்குழு வழக்கு
அதிமுக பொதுக்குழு வழக்கு தற்போது உச்சத்தில் இருக்கிறது. எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் இடையிலான இந்த மோதலில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில் விசாரணை இப்போதுதான் தீவிரம் அடைந்து உள்ளது. வரும் 30ம் தேதி வழக்கில் விசாரணை நடத்தப்பட உள்ளது. அதன்பின் மேலும் சில அமர்வுகள் விசாரணை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணைகளுக்கு பின்பே அதிமுக ஒற்றை தலைமை நீடிக்குமா அல்லது இரட்டை தலைமை நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுவரை நான்தான் அதிமுகவின் தலைவர் என்று மாறி மாறி எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் இருவரும் ஷோல்டரை நிமிர்த்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.
மோதல்
இந்த உட்கட்சி மோதல் காரணமாக பல நிர்வாகிகள் வார வாரம் அணி மாறி வருகிறார்கள். உதாரணமாக எடப்பாடி ஆதரவாளர்கள் பலர் சேலத்தில் இருந்து தேனி சென்று ஓ பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர். அதேபோல் தென்மண்டல நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர். இப்படி மாறி மாறி நிர்வாகிகள் பலர் கேம்ப் மாறி வருகின்றனர். இப்போது யார் யாருடன் இருக்கிறார், யாருக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்பதையே சொல்ல முடியாத அளவிற்கு பல்வேறு மாற்றங்கள் கட்சிக்குள் ஏற்பட்டு உள்ளது. ஆனால் இப்படி அணி மாறுவது எல்லாம் பெரும்பாலும் புதிய நிர்வாகிகள், அடிமட்ட நிர்வாகிகள்தான்.
மாஜிக்கள்
பெரும்பாலும் மாஜிக்கள், மாவட்ட செயலர்கள், எம்எல்ஏக்கள் அணி மாறுவது இல்லை. இவர்கள் எல்லாம் இப்போது இருக்கும் அணியிலேயேதான் இருக்கிறார்கள். இவர்கள் அணி மாறாமல் இருக்க ஒரு முக்கிய காரணம் இருப்பதாக அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கிறார்கள். எப்படியும் இன்னும் ஒரு மாதத்திற்குள் அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்துவிடும். அதுவரை அமைதியாக இருக்கலாம்.இப்போதே ஏதாவது ஒரு அணிக்கு போய் எதிர் தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் சிக்கல். இருக்கிற அணியிலேயே இருப்போம். பிறகு தீர்ப்பு வந்ததும் யார் கை ஓங்குகிறதோ அவர்களின் அணிக்கு சென்றுவிடலாம். அதுவரை அமைதியாக இருப்போம் என்று நிர்வாகிகள் இருக்கிறார்களாம்.
அமைதி
இந்த நிலையில்தான் மாஜி அமைச்சர் ஒருவர் மிகவும் அமைதியாக இருக்கிறாராம். அந்த மாஜி அமைச்சர் முன்பெல்லாம் அதிமுகவின் முகம் போல இருந்தார். அடிக்கடி ஊடகங்களில் தோன்றி பேசுவார். திமுகவிற்கு சரமாரி பதிலடியை கொடுப்பார். மிகவும் ஜாலியாக இருக்க கூடியவர். இவர்தான் தற்போது திடீரென சைலன்ட் ஆகி உள்ளார். அதிமுகவில் அவருக்கு முன்பு பொருளாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த பதவி கொடுக்கப்படவில்லை. இல்லை என்றால் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. அதற்கு முன்பாக எம்பி பதவிக்கும் திட்டம். ஆனால் அந்த பதவியும் கிடைக்கவில்லை.
சைலன்ட்
இதன் காரணமாக அந்த நிர்வாகி அப்செட்டில் இருப்பதாக கூறப்பட்டது. கட்சியில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்து, ஏமாற்றம் அடைந்து அப்செட்டில் இருப்பதாக கூறப்பட்டது. இப்படிப்பட்ட நிலையிலும் கூட அவர் எடப்பாடிக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்து வந்தார். எடப்பாடியை தொடர்ந்து ஆதரித்து பேசி வந்தார். ஆனால் தற்போது திடீரென அவரும் அமைதியாக மாறி உள்ளார். ஊடகங்களில் அவர் எதுவும் பேசுவது இல்லை. செய்தியாளர்களை சந்திப்பது இல்லை. எங்கே போனார் அந்த நிர்வாகி. வீட்டில்தான் இருக்கிறார். கட்சி ஆட்களை பார்க்கிறார். ஆனால் ஊடகங்களில் பேசுவது இல்லையே? என்று சக நிர்வாகிகள் கேட்க தொடங்கி இருக்கிறார்களாம்.
எடப்பாடி
எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் பிசியாக சுற்று பயணங்களை மேற்கொண்டு வருகிறார். ஆளுநரை சந்திக்கிறார். ஆனால் அந்த நிர்வாகி மட்டும் அப்படியே அமைதியாக இருக்கிறார். சமீபத்தில் வழக்கு ஒன்றில் அவர் சிறைக்கு சென்று வந்தார். அதன்பின் மொத்தமாக மாறிவிட்டார் என்கிறார்கள். அவர் பொதுவாக நிறைய பேசும் குணம் கொண்டவர். முக்கியமாக திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் விமர்சனம் செய்யாமல் அவர் இருக்க மாட்டார். அப்படி இருக்கையில் அவர் எப்படி அமைதியானார். ஆச்சர்யமாக இருக்கிறதே. உண்மையில் அமைதிக்கு காரணம் என்ன என்று கேள்வி அதிமுக நிர்வாகிகள் இடையே எழுந்து உள்ளதாம். எடப்பாடி பழனிசாமிதான் அவருக்கு வாய் பூட்டு போட்டதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டு இருக்கிறது. சமீபத்தில் அவர் ஒரு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டி பெரிய அளவில் கட்சிக்குள் விவாதத்தை ஏற்படுத்தியதால்.. கொஞ்ச நாளுக்கு எதுவும் பேச வேண்டாம். வழக்கு முடியட்டும் என்று எடப்பாடி வாய்ப்பூட்டு போட்டதாகவும் கூறப்படுகிறது. உண்மை என்ன என்பது அந்த மாஜிக்கே வெளிச்சம்!