சிக்கியது 2 ஹார்ட் டிஸ்க்! பறந்த 5 டிரோன்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு.. எஸ்ஐடியிடம் மாட்டிய ஆதாரம்?
சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளியில் நடத்தப்பட்ட ஆய்வில் 2 ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி பள்ளியின் வாசலில் நடைபெற்ற போராட்டம் மிகப்பெரிய கலவரமாக உருவெடுத்தது. இது தொடர்பாக போலீசார் தரப்பு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. மாணவி மரணம் தொடர்பாக தனியாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.
டிஐஜி பிரவீன் குமார் தலைமையில் எஸ்ஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு மேலும் 3 நாட்களுக்கு அங்கு விசாரணை செய்ய உள்ளது.

2 ஹார்ட் டிஸ்க்
இன்று கள்ளக்குறிச்சி பள்ளியில் நடத்தப்பட்ட ஆய்வில் 2 ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கலவரத்தின் போது வெளிப்புற சுவர்களுக்கு அருகே பல கணினிகள், தொலைபேசிகள் வைத்து கொளுத்தப்பட்டன. இதில் பல கணினி தொடர்பான பொருட்கள் எரிந்து நாசம் ஆகின. இன்று அங்கு செய்யப்பட்ட சோதனையில் தீயில் நாசம் அடையாத இரண்டு ஹார்ட் டிஸ்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டும் நல்ல நிலையில் இருந்தன. இவை முக்கியமான ஆதாரங்களாக இந்த வழக்கில் மாறுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

விசாரணை
இந்த ஹார்ட் டிஸ்க்குகளை இன்று அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். இது வெறும் கணினி ஹார்ட் டிஸ்க்குகளா அல்லது சிசிடிவி கேமராவுடன் இணைக்கப்பட்டு இருந்த கணினியின் ஹார்ட் டிஸ்க்குகளா என்று கண்டுபிடிக்க உள்ளனர். அதேபோல் தற்போது அங்கு டிரோன் கேமரா உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கலவரம் நடந்த பகுதி முழுக்க டிரோன் கேமராக்களை பறக்கவிட்டு ஆய்வு செய்தனர். 5 குழுக்களாக பிரிந்து சோதனை செய்து வருகின்றனர்.

பிளாக்
இந்த விசாரணை இன்னும் 2 நாட்கள் நடக்க உள்ளது. எல்லா நாட்களும் பிளாக் பிளாக்காக சென்று ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கலவரம் எப்படி அரங்கேற்றப்பட்டது என்று கண்டுபிடிப்பதற்காக தற்போது டிரோன் மூலம் படம் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கலவரத்தில் சேதம் எவ்வளவு ஏற்பட்டது என்பதும் இந்த டிரோன் சோதனை மூலம் கண்டுபிடிக்கப்படும். 5 டிரோன் கேமராக்கள் இன்று பயன்படுத்தப்பட்டது.

கைரேகை
அதேபோல் அங்கு இன்று கைரேகை ஆய்வும் செய்யப்பட்டு வருகிறது. தடயவியல் நிபுணர்கள் மூலம் எல்லா இடங்களிலும் கைரேகை எடுக்கப்பட்டு வருகிறது. என்னென்ன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது, எப்படி கலவரம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்று ஆய்வு செய்து வருகிறார்கள். கலவரத்தை ஏற்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யும் விதமாக இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications