நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ! அலறிய பயணிகள்! ஓடும் ரயிலில் திக் திக் நொடிகள்! என்ன காரணம்?
சென்னை : அகமதாபாத் - சென்னை இடையே இயக்கப்பட்ட நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், திடீரென எழுந்த புகை மூட்டத்தால் அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் கடும் அச்சமடைந்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் இடையே நவஜீவன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
சுமார் 1892 கிலோமீட்டர் தூரத்தை சுமார் 32 மணி நேரத்தில் இந்த ரயில் கடக்கிறது. அகமதாபாத் முதல் சென்னை சென்ட்ரல் வரை சுமார் 41 இடங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
பிரியா மரணம் : மருத்துவ அறிக்கையில் வெளிவரும் 'பகீர்’ தகவல்கள்.. இன்னும் பலர் சிக்குகிறார்கள்..?
நவஜீவன் எக்ஸ்பிரஸ்
குஜராத் சென்னை இடையே மட்டுமல்லாமல் கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட பல ரயில் நிலையங்களை இணைக்கும் இந்த ரயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்த நவஜீவன் ரயிலில் திடீரென தீப்பற்றியதால் அதில் பயணம் செய்த பயணிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
திடீர் தீ
நேற்று அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் இன்று அதிகாலையில் கர்நாடக மாநிலம் கூடூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு உணவு தயாரிக்கும் பேன்ட்ரி எனப்படும் சமையல் கூடத்தில் திடீரென தீ பற்றியது. மளமளவென பரவிய தீ கரும் புகையோடு வெளியேறியதால் மற்ற பெட்டிகளில் இருந்த பயணிகள் கடும் அச்சமடைந்து கூச்சலிட்டனர்.
1 மணி நேரம் தாமதம்
இதையடுத்து ரயில் உடனடியாக கூடூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே அங்கு தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் ரயிலின் சமையல் கூடத்தில் பற்றிய தீயை துரிதமாக செயல்பட்டு அணைத்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் ரயில் பயணிகள் அந்த ரயில் நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து தீ அணைக்கப்பட்டதை அடுத்து அந்த ரயில் சென்னை புறப்பட்டு சென்றது.
விசாரணைக்கு உத்தரவு
ரயிலில் உணவு தயாரிக்கும் போது உணவுப் பொருட்களில் பற்றிய தீ எண்ணெய் பசை காரணமாக ரயிலில் பற்றியதாகவும் அதே பெட்டியுடன் தான் சென்னை வந்தது என அதிகாரிகள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் ரயில் உணவு கூடத்தில் பணியாற்றிய ஊழியர்களின் அலட்சியமே தீ விபத்துக்கு காரணம் எனவும் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதிகாலை நேரத்தில் ரயிலில் தீப்பற்றியதாக பரவிய தகவலால் அப்பகுதி மக்களும் பரபரப்பு அடைந்தனர். மேலும் ரயிலில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களும் அச்சமடைந்த நிலையில் விபத்து குறித்த முழுமையான தகவல் வெளியானவுடன் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.