என் வாக்கை எப்படி இன்னொருவர் போடலாம்? சென்னையில் கேள்வி கேட்டபெண்! டெண்டர் ஓட்டு சான்ஸ்
சென்னை: சென்னை அடையாறில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு இன்று இளம்பெண் ஒருவர் ஓட்டுப்போட சென்றார். ஆனால் அவரது ஓட்டை இன்னொருவர் ஏற்கனவே போட்டு இருந்தார். இதையடுத்து அவர் 'டெண்டர் ஓட்டு' முறையில் வாக்களித்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் சிறு சிறு வாக்குவாதம், வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு உள்ளிட்டவற்றை தவிர்த்து பெரிய அளவில் அசம்பாவிதங்கள், வன்முறைகள் நடக்கவில்லை. அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இதற்கிடையே தான் தற்போது இன்னொரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சென்னையில் இளம்பெண் ஒருவர், 'சேலஞ்ச் ஓட்டு' முறையில் வாக்களித்துள்ளார். இதுபற்றி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கூறியுள்ளதாவது:
ஏற்கனவே போடப்பட்ட ஓட்டு
''நான் வேளச்சேரியை சேர்ந்தவள். எனக்கு வாக்குச்சாவடி மையத்துக்கான பூத் சிலிப் கிடைக்கவில்லை. ஆன்லைனில் என்னுடைய விவரங்கள் போட்டு தேடினேன். அடையாறில் எனக்கான பூத் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அடையாறு சென்றேன். அங்கு வாக்களிக்க வரிசையில் ஒரு மணிநேரம் நின்றேன். ஓட்டுப்போட உள்ளே சென்றபோது தான் என்னுடைய ஓட்டை ஏற்கனவே ஒருவர் போட்டதாக தெரிவித்தனர்.
வாக்காளர் பட்டியலில் என்னுடைய பெயரில் இன்னொரு போட்டோ உள்ளது. 24 வயது என கூறியுள்ளார். கைரேகை வைத்துள்ளார். என்னிடம் 'செகண்ட் நேம்' என்று கேட்டனர். ஹரிஹரன் என்று கூறினேன். எல்லாம் ஆவணங்களில் சரியாக இருந்தது. ஆனால் போட்டோ மட்டும் வேறு உள்ளது. முதலில் வந்தவரிடம் 'செகண்ட் நேம்' கேட்டு இருக்க வேண்டும். 'போட்டோ செக்' செய்திருக்க வேண்டும். எப்படி ஓட்டுப்போட விட்டனர்? என்று தெரியவில்லை.
மாற்று முறையில் ஓட்டளித்தேன்
இருப்பினும் ஓட்டு போட்டேன். அதனை 'டெண்டர்' அல்லது 'சேலஞ்ச்' ஓட்டு என்று சொன்னார்கள். இதனை என்னால் ஏற்க முடியவில்லை. யாரும் என்னுடைய கேள்விக்கு பதிலளிக்கவில்லை. இது ஏமாற்றமாக உள்ளது. இப்படியான சம்பவங்கள் நடப்பதை நினைத்து வருந்துகிறேன். இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவை பார்த்து வழக்கறிஞர்கள் சப்போர்ட் செய்தனர். எனக்கு பதிலாக போடப்பட்ட ஓட்டை கேன்சல் செய்ய வேண்டும். இதுதொடர்பாக ரிட்டர்னிங் ஆபிசரை அணுக உள்ளேன்'' என்றார்.
டெண்டர் ஓட்டு என்பது என்ன?
பொதுவாக வாக்குச் சாவடிக்கு ஓட்டளிக்க செல்லும்போது ஒருவரின் ஓட்டை ஏற்கனவே யாரோ ஒருவர் போட்டு சென்றால் 'தேர்தல் நடத்தை விதிகள் 1961' பிரிவு 49பி என்ற பிரிவின் கீழ் நீங்கள் "டெண்டர் ஓட்டு" (ஈடு செய்த வாக்கு) போட உரிமை கோரலாம். அதன்படி வாக்களிப்பதற்கான அடையாள அட்டையை தேர்தல் அதிகாரியிடம் காட்டி அந்த நபர் நான் தான் என்று உறுதி செய்ய வேண்டும். அதனை அதிகாரி ஏற்றுக்கொண்டால் 'டெண்டர்' ஓட்டு போட அனுமதி வழங்கப்படும்.
இருப்பினும் மின்னணு இயந்திரத்தில் வாக்களிக்க முடியாது. அதற்கு பதில் தனிச்சீட்டில் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களித்து அதிகாரியிடம் ஒப்படைக்கலாம். இந்த ஓட்டு பொதுவாக எண்ணப்படாது. இருப்பினும் வெற்றி தோல்வி வித்தியாசத்தில் மிககுறைந்த அளவு வரும்போது யாராவது நீதிமன்றத்தை நாடி மீண்டும் ஓட்டு எண்ணிக்கை கோரினால் இந்த வாக்கு எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications