நான் இன்னிக்கு மவுன விரதம்.. செய்தியாளர்கள் கேள்விக்கு வாயை திறந்து பதில் கூறிய எஸ் வி சேகர்
சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூகவலைதளங்களில் இழிவாக பதிவிட்ட வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்த எஸ் வி சேகர், பத்திரிகையாளர்கள் கேள்விக்கு நான் இன்றைக்கு மவுன விரதம் என வாயை திறந்து கூறினார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி தரக்குறைவாக ஒருவர் பேஸ்புக் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த தகவலை, நடிகரும் பாஜக-வை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டு இருந்தார்.

கடும் கண்டனம்
இந்த விவகாரம் பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி பொதுமக்கள், பெண்ணிய அமைப்புகள், அரசியல் கட்சியினரிடமும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து பத்திரிகையாளர்கள் எஸ்.வி.சேகர் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை காவல் துறை
இதுதொடர்பாக சென்னை காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறை பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

மன்னிப்பு கேட்க தயார்
இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபரின் கருத்தையே எஸ்.வி.சேகர் பகிர்ந்தார். பிரச்சனை வந்தவுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவை நீக்கியதுடன் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டு விட்டதாகவும், நீதிமன்றத்தில் மேலும் ஒரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆஜராக உத்தரவு
இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு முறை கூட எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகவில்லை எனக் கூறினார். இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஏப்ரல் 2 ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென எஸ்.வி.சேகருக்கு உத்தரவிட்டிருந்தார்.

மௌன விரதம்
இந்த உத்தரவின் பேரில் எஸ் வி சேகர் இன்றைய தினம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அலுவலகத்தில் ஆஜராகினார். அங்கு வாக்குமூலம் அளித்தார். அப்போது வெளியே வந்த அவரிடம் நிருபர்கள், "பெண் பத்திரிகையாளர்கள் வழக்கு" குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது எஸ் வி சேகர், "நான் இன்று மவுன விரதம். எனவே எதுவாக இருந்தாலும் எனது வழக்கறிஞரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் " என்றார்.












Click it and Unblock the Notifications