இரட்டை இலைக்காக ஊர் ஊராக பிரச்சாரம் செய்த போண்டா மணி! எட்டிக்கூட பார்க்காத அதிமுக நிர்வாகிகள்!
சென்னை: சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் போண்டா மணியை, அதிமுக சார்பில் எந்த நிர்வாகியும் சந்தித்து நலம் விசாரிக்கவில்லை.
இத்தனைக்கும் நடிகர் போண்டா மணி ஒரு அதிமுககாரர் என்பதும் தேர்தலின் போது இரட்டை இலைக்காக ஊர் ஊராக பிரச்சாரம் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மனிதாபிமானத்துடன் நடிகர் போண்டா மணியை நேரில் சந்தித்து நலம் விசாரித்து தைரியம் ஊட்டியிருக்கிறார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.
சிறுநீரகப் பிரச்சனை
நகைச்சுவை நடிகர் போண்டா மணி சிறுநீரகப் பிரச்சனை காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை அவரது நண்பர்களும், மருத்துவர்களும், சட்டப்படி செய்து வருகின்றனர். இந்நிலையில் உடல் நலிவுற்று மன வலிமை இழந்து காணப்படும் நடிகர் போண்டா மணியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து நம்பிக்கை அளித்திருக்கிறார்.
கண்டுகொள்ளாத அதிமுக
எந்தக் கட்சியை எதிர்த்து அவர் பிரச்சாரம் செய்தாரோ இன்று அதே கட்சியின் ஆட்சியில் உயர் தர சிகிச்சை பெற்று வருகிறார் போண்டா மணி. இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், அதிமுக சார்பில் எந்த ஒரு நிர்வாகியும் நடிகர் போண்டா மணியை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க வரவில்லை என்பது தான். போண்டா மணி அதிமுகவுக்காக தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்ததுடன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
முன்னாள் அமைச்சர்கள்
அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பெஞ்சமின் உட்பட பலருக்கும் இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டு வீதி வீதியாக நடந்து சென்றார் போண்டா மணி. கடைசியில் கட்சிக்காரர்கள் உதவ முன்வராவிட்டாலும் கூட நலம் விசாரிக்க கூட யாரும் முன்வரவில்லை என்பது தான் வேதனை. தன்னை சந்தித்து நலம் விசாரிக்க அதிமுகவிலிருந்து யாரும் வரவில்லை என்ற மன வருத்தம் இருந்தாலும் கூட அதனை போண்டா மணி வெளிக்காட்டவில்லை.
நடிகர் சங்கம்
இதனிடையே நடிகர் சங்கம் சார்பில் போண்டா மணிக்கு ஏதேனும் உதவிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 240 திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக போண்டா மணி நடித்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.