நடிகர் விஜய் வழக்கில்.. ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு.. முடிவுக்கு வந்த சொகுசு கார் விவகாரம்
நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு அளிக்கிறது ஹைகோர்ட்
சென்னை: நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்கு முன் முழுநுழைவு வரி செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்கக்கூடாது என்றும், 2019 ஜனவரிக்கு பின்னும் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் என்றும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.. இதையடுத்து, சொகுசு கார் இறக்குமதி வரி தொடர்பாக நடிகர் விஜய் தொடுத்த வழக்கை ஹைகோர்ட் இன்று முடித்து வைத்தது.
கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து நடிகர் விஜய் இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக வணிக வரித்துறை உத்தரவிட்டது.
அதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது... நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு, விஜய் தரப்பில் 7,98,075 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது.
விஜய் மீது விமர்சனம்.. அஜித் ரசிகர்களுக்கு வந்துச்சே கோபம்! ரணகளமாகும் ட்விட்டர் -திடீரென என்னாச்சு?
உத்தரவு
வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக 30,23,609 ரூபாய் செலுத்த வேண்டுமென 2021 டிசம்பர் 17ல் வணிக வரித்துறை உத்தரவிட்டது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார். மேலும் இதே கோரிக்கைகளுடன் அடையார் கேட் ஹோட்டல் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த மனுக்களும் நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவோடு சேர்த்து நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணை நடைபெற்றது.
ஹாரிஸ் ஜெயராஜ்
அந்த விசாரணையின்போது நடந்த வாதங்கள் இவைதான்: முதலாவதாக, ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அடையார் கேட் தரப்பில் வழக்கறிஞர் ஆஜரானார்.. அப்போது, 2008ம் ஆண்டு கார் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் வரி செலுத்தக்கோரி 2021ம் ஆண்டு தான் நோட்டீஸ் அளித்ததால் அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டுமென வாதிப்பட்டது.. இதற்கு பிறகு, நடிகர் விஜய் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2 சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டுமெனவும் ஆனால் தனக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விஜய்
மேலும், நடிகர் விஜய் வழக்கில் பதிலளித்த வணிக வரித்துறை, நுழைவு வரியை செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் 2019ல் உத்தரவு பிறப்பித்த பிறகும், குறித்த காலத்தில் நுழைவு வரி செலுத்தாததால், 2005 டிசம்பர் முதல், 2021 செப்டம்பர் வரையிலான 189 மாதங்களுக்கு நுழைவு வரியில் 2 சதவீதம் அபராத வட்டியாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்தும்படி உத்தரவிட்டதாகவும், சட்டத்தில் அதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதில் இல்லை
காரை வேறொரு நபருக்கு விற்று விட்டதாக நடிகர் விஜய் சொன்னாலும், இறக்குமதி செய்த அவர் நுழைவு வரி செலுத்தியாக வேண்டும் எனவும், ஆவணங்களை தாக்கல் செய்ய நோட்டீஸ் கொடுத்து, போதிய அவகாசம் வழங்கிய போதும், எந்த பதிலும் இல்லாததால் வட்டார போக்குவரத்து அலுவலக ஆவணங்களைப் பெற்று நுழைவு வரியை கணக்கிட்டதாகவும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்குகளில் இன்றுநீதிபதி சுரேஷ்குமார், தீர்ப்பு வழங்கினார்.
அபராதம்
அதன்படி, நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரியையும் செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது என்றும், 2019 ஜனவரிக்கு பின்னும் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் என வணிக வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.. இதையடுத்து, நுழைவு வரி செலுத்தவில்லை என அபராதம் விதித்ததை எதிர்த்த நடிகர் விஜய் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, நுழைவு வரியை ரத்து செய்யக் கோரி இசையமைப்பாளர் ஹாரீஷ் ஜெயராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளையும் முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்.