நானும் இஸ்லாமிய பெண்தான்..ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்றதில்லை..பார்த்ததுமில்லை -பாஜக குஷ்பு கருத்து
சென்னை: கல்வி என்பது மதம் சார்ந்தது அல்ல, கல்வி நிறுவனங்கள் உங்கள் மதத்தைக் காட்டுவதற்காக அல்ல எனவும், தான் பள்ளிக்கூடம் சென்ற போது ஹிஜாப் அணியவில்லை, அணிந்து வந்த மாணவிகளையும் பார்த்ததில்லை என நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள உடுப்பி, சிவமோகா, சிக்மக்ளூர், மங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர திடீர் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் ஹிஜாப் அணிந்து கொண்டு கல்வி நிறுவனங்களுக்குள் முஸ்லீம் மாணவிகள் வந்தால் நாங்களும் காவி துண்டு அணிவோம் என கூறி இந்துத்துவா மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தங்கள் உரிமைகளுக்காக முஸ்லீம் மாணவிகள் பள்ளி வாயிலில் அமர்ந்து போராடினர்.
ஹிஜாப்.. தேசிய பிரச்சனையாக்காதீர் -மாணவிகள் மேல்முறையீட்டை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
ஹிஜாப் விவகாரம்
கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த மாதம் இதுவரை சந்தித்திராத ஒரு புதிய பிரச்சனை உருவானது. அங்குள்ள அரசு கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்த போது வகுப்பில் அமர கூடாது என கல்லூரி நிர்வாகம் கூறியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ-மாணவியர்களை சிலர் காவி துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரத் தொடங்கினர்.
ஹெய் ஸ்ரீராம் முழக்கம்
கர்நாடகா மாநிலம் மண்டியாவில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை இந்துத்துவா மாணவர்கள் முற்றுகையிட்டு ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டனர் இந்துத்வா மாணவர்கள். அதற்கு அந்த மாணவியும் தைரியமாக பதிலுக்கு அல்லா ஹூ அக்பர் என்றார். அதையடுத்து, அந்த மாணவியையும் ஆசிரியர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அந்த பள்ளி மாணவிக்கு, நாடு கடந்தும் பல்வேறு ஆதரவுக் குரல்கள் வந்துகொண்டிருக்கின்றன. துணிச்சலுடன் அவர் செயல்பட்டதாக சமூக வலைதளத்தில் பலர் பாராட்டி வருகின்றனர்.
நடிகை குஷ்பு
ஹிஜாப் விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகி வரும் நிலையில், கல்வி என்பது மதம் சார்ந்தது அல்ல, கல்வி நிறுவனங்கள் உங்கள் மதத்தைக் காட்டுவதற்காக அல்ல எனவும், தான் பள்ளிக்கூடம் சென்ற போது ஹிஜாப் அணியவில்லை, அணிந்து வந்த மாணவிகளையும் பார்த்ததில்லை என நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு," கல்வி என்பது மதம் சார்ந்தது அல்ல, சமத்துவம் பற்றியது. பள்ளியில் சீருடை அணிந்ததற்காக நான் நம்புகிறேன். விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் உங்கள் மதத்தைக் காட்டுவதற்காக அல்ல, ஒரு இந்தியராக உங்கள் பலத்தைக் காட்டுவதற்காக. ஹிஜாவ் விவகாரத்தில் அரசியலில் செய்வது அவமானம்." என பதிவிட்டுள்ளார்.
ஒன்றாக இருக்க வேண்டும்
"நம் பள்ளி நாட்களில் எப்படி இருந்தோமோ, அதே போல் ஒன்றாக இருப்போம். என் பள்ளி நாட்களில் சீருடையைத் தவிர வேறு எதையும் அணிந்த குழந்தைகளை நான் பார்த்ததில்லை. என் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் போது கூட இல்லை. யாரும் குறை கூறவில்லை. உங்கள் மதத்தை உங்கள் பேட்ஜாக பள்ளிக்கு அணிய வேண்டும் என்ற இந்த திடீர் தூண்டுதல் ஏன்?பள்ளிகளுக்கு விதிகள் இல்லையா?" எனவும், "பள்ளி என்பது நீங்கள் என்ன அணிய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் இடம் அல்ல. இது ஒழுக்கம் நிறைந்த இடம். ஒவ்வொரு கல்வி நிறுவனமும் கற்றலில் ஒற்றுமையையும் மரியாதையையும் காட்ட ஒரு விதியைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் வெளியில் என்ன உடுத்துகிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். பள்ளிகளில் நடத்தை விதிகளை மதிக்க வேண்டும். கற்றலை மதிக்கவும்." எனவும் குஷ்பு பதிவிட்டுள்ளார்.