சித்ராவின் செல்போன் ஆதாரங்கள் அழிப்பு.. ஷூட்டிங் ஸ்பாட்டில் ரகளை.. ஹேம்நாத்திடம் துருவும் போலீஸ்!
சென்னை: சித்ராவின் செல்போன் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதால் அவற்றை மீட்கும் முயற்சியில் சைபர் கிரைம் போலீஸார் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தனி அறையில் ஹேம்நாத்திடம் போலீஸார் தொடர்ந்து 4ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சின்னத்திரை நடிகை சித்ரா தனது துருதுருவென்ற நடிப்பாலும், உடல் மொழியாலும் ரசிகர்களிடையே அதிகம் விரும்பப்பட்டவர். அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்ததால் மேலும் புகழடைந்தார்.
அவர் கடந்த புதன்கிழமை நசரத்பேட்டையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தற்கொலை அல்ல, கொலை என சித்ராவின் பெற்றோரும், நண்பர்களும் சந்தேகித்தனர்.
யார் அந்த "விஐபி".. சித்ராவுக்கு குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் அனுப்பியவர்.. போலீஸ் அதிரடி விசாரணை
தற்கொலை
எனினும் அவரது பிரேதப் பரிசோதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை முதல் சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை தனிஅறையில் வைத்து இன்று 4ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆதாரங்கள்
சித்ராவின் செல்போனில் இருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டது. இதனால் அவர் யாரை தொடர்பு கொண்டார், யாரிடமெல்லாம் பேசினார், யார் யாருக்கு மெசேஜ் அனுப்பினார் போன்ற தகவல்கள் கண்டுபிடிக்கவில்லை. இந்த ஆதாரங்களை மீட்க சைபர் கிரைம் போலீஸார் முயற்சித்து வருகிறார்கள்.
போலீஸார்
அது மட்டுமல்லாமல் செவ்வாய்க்கிழமை இரவு சித்ரா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாராம். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் சித்ரா தங்களுடன் இருந்த வரை சகஜமாகவே இருந்தார் என்றும் அவரது நடவடிக்கையில் எந்த மாற்றமும் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்கள்.
வற்புறுத்தல்
சித்ராவின் மரணத்திற்கு அவரது தாயும், அவரது கணவரும் கொடுத்த துன்புறுத்தலே காரணம் என சொல்லப்படுகிறது. கணவர் ஹேம்நாத் , சித்ராவின் படப்பிடிப்பு தளங்களுக்கு வந்து பிரச்சினை கொடுத்ததாகவும் அவர் தொடர்ந்து நடிக்கக் கூடாது என வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
டார்ச்சர்
திருமணமானவுடன் கணவர் கூறுவதைத்தான் கேட்க வேண்டும். எனவே நடிக்க வேண்டாம் என சித்ராவின் தாயும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மாறி மாறி கொடுத்த டார்ச்சரின் காரணமாகவே சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. எனினும் விசாரணைகளின் முடிவுகளில்தான் நடந்தது என்ன என்பது தெரியவரும்.