உள்ளாட்சி தேர்தல் .. சுறுசுறுப்பாக களமிறங்கிய அ.தி.மு.க.. கூடுதல் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு இருந்ததால் வார்டு மறுவரையறை காரணமாக இந்த மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.
இந்த மாவட்டங்களில் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த மாவட்டங்களில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று மிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உள்ளாட்சித் தேர்தல்
இந்த நிலையில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது மேற்கண்ட இந்த மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் தொடங்கி செப்.22-ம் தேதி வரை நடைபெறும் என்றும் 23-ம் தேதியன்று வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு
அக்டோபர் 12-ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கடைசி 1 மணி நேரம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்களாக தனித்தனி ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

அ.தி.மு.க. . சுறுசுறுப்பு
விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தேர்தலுக்கு தயாராகும் பணியில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக அ.தி.மு.க.வில் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்துக்கு சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

யார், யார்?
நெல்லை மாவட்டத்துக்கு ராஜலெட்சுமி, கோபாலகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோரையும் நியமனம் செய்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளனர்.தமிழக்தில் தொடந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்து விட்ட அ.தி.மு.க இந்த 9 மாவட்டங்களில் வெற்றி வாகை சூட தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் ஆணையம் அறிவித்த ஒரு மணி நேரத்தில் அ.தி.மு.க கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications