மயிலாப்பூர் இரட்டை கொலை நடந்தது எப்படி?.. நேபாளம் தப்ப முயன்ற கொலையாளிகள்.. பரபரப்பு தகவல்
சென்னை: சென்னை மயிலாப்பூரில் நடந்த இரட்டை கொலை எப்படி நடந்தது என்பது குறித்து காவல் துறை கூடுதல் ஆணையர் கண்ணன விளக்கினார்.
Recommended Video
சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியில் வசித்து வந்தவர் ஸ்ரீகாந்த் (60). இவரது மனைவி அனுராதா (55). இவர்கள் இருவரும் அமெரிக்காவில் உள்ள தங்கள் மகளை பார்ப்பதற்காக கடந்த நவம்பர் மாதம் சென்னையிலிருந்து சென்றிருந்தனர்.
கர்ப்பிணியாக உள்ள மகளுக்கு குழந்தை பிறந்ததும் 3 மாதங்கள் அமெரிக்காவிலேயே தங்கியிருந்தனர். பின்னர் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை திரும்பினர். அவர்களை டிரைவர் கிருஷ்ணா மயிலாப்பூரில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றார்.
காருக்கு பின்னாடி என்ன? டெட் பாடியா? சென்னை தம்பதி கொலை.. குற்றவாளியை சிக்க வைத்த அந்த ஒரு வீடியோ!
ரவி ராய்
அங்கு அவர்கள் இருவரையும் தனது நண்பர் ரவி ராயுடன் கிருஷ்ணா கொன்றுவிட்டு நெமிலிச்சேரியில் உள்ள பண்ணை வீட்டில் புதைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் ஓங்கோலில் வைத்து கிருஷ்ணாவையும் ரவியையும் கைது செய்தது. இதுகுறித்து கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஸ்ரீகாந்த் - அனுராதா
அவர் கூறுகையில் அமெரிக்காவுக்கு சென்ற ஸ்ரீகாந்த்- அனுராதா தம்பதிகளில் கடந்த மார்ச் மாதம் ஸ்ரீகாந்த் மட்டும் சென்னைக்கு ஒரு பணப்பரிமாற்றம் தொடர்பாக வந்திருந்தார். பின்னர் அவர் மீண்டும் அமெரிக்கா சென்றுவிட்டார். ஓட்டுநராக உள்ள கிருஷ்ணாவின் தந்தை நெமிலிச்சேரி வீட்டின் காவலாளியாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பிக்கைக்குரியவராக இருந்துள்ளார்.
15 வயதில் மகன்
இதன் அடிப்படையில் கிருஷ்ணா மயிலாப்பூரில் தங்கள் வீட்டு வளாகத்தில் ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவர் நேபாளத்தை சேர்ந்தவர். கிருஷ்ணாவுக்கு திருமணமாகி 15 வயதில் மகன் இருக்கிறார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்துவிட்டார். மகன் மட்டும் டார்ஜிலிங்கில் படித்து வருகிறார்.
ரூ 40 லட்சம் கொள்ளையடிக்க பிளான்
இந்த டார்ஜிலிங்கில் மகனை பார்க்க சென்ற போதுதான் கிருஷ்ணாவுக்கு ரவி ராயுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் ஸ்ரீகாந்தும் அனுராதாவும் வீட்டில் ரூ 40 கோடி பணம் இருக்கும் என நம்பி அதை கொள்ளையடிக்க பக்காவாக ஸ்கெட்ச் போட்டுள்ளனர். பீரோவின் சாவி முதியவர்களிடம் இருந்ததால் இத்தனை நாள் இவர்களின் வரவிற்காக காத்திருந்தனர்.
சடலத்துடன் கார்
சம்பவத்தினத்தன்று ஸ்ரீகாந்தையும் அனுராதாவையும் காரில் வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் அவர்கள் இருவரையும் தனித்தனியே உருட்டுக் கட்டையால் இருவரும் தாக்கியுள்ளனர். கீழ் தளத்தில் ஸ்ரீகாந்தையும் மேல் தளத்தில் அனுராதாவையும் தாக்கியுள்ளனர். பின்னர் பீரோவை திறந்து அங்கிருந்த 9 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். மேலும் 20 லட்சம் ரொக்கம், 50 கிலோ வெள்ளி பொருட்கள், 3 லேப்டாப், ஸ்மார்ட் போன் ஆகியவற்றை திருடிவிட்டனர்.
கைது செய்தது எப்படி
பின்னர் விடிவதற்கு முன்னர் இவர்கள் இருவரையும் டிஸ்போஸ் செய்ய நினைத்த ரவியும் கிருஷ்ணாவும் காரில் சடலங்களை வைத்துக் கொண்டு நெமிலிச்சேரி பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு பெரிய பள்ளம் தோண்டி சடலங்களை புதைத்துள்ளனர். பின்னர் கொள்ளையடித்த நகை, பணங்களுடன் நேபாளம் தப்ப திட்டமிட்டிருந்தனர். மற்ற நாட்டிற்கு தப்பிவிட்டால் அவர்களை கைது செய்வது வருடக்கணக்கில் ஆகிவிடும். இதனால்தான் பக்காவாக பிளான் செய்து நேபாளம் தப்ப தேவையான நடவடிக்கைகளை செய்துள்ளனர்.
ரத்த கறைதான் க்ளூ
இந்த நிலையில்தான் ஓங்கோல் போலீஸிடம் சிக்கினர். அதற்குள்ளாக தம்பதியை காணவில்லை என்ற புகாரின் பேரில் மயிலாப்பூர் வீட்டிற்கு சென்ற போது அங்கிருந்த சிறிய அளவிலான ரத்த கறையை (ஏற்கெனவே ரத்த கறையை கழுவியிருந்தனர்) தடயவியல் நிபுணர்கள் பார்த்தனர். அப்போதுதான் இந்த வீட்டில் ஏதோ பிரச்சினை நடந்துள்ளது தெரியவந்தது.
ஓங்கோல் தப்பிய கொலையாளிகள்
இதையடுத்து அவர்களது காரை தேடினோம். முதலில் பண்ணை வீட்டிற்கு சென்றோம். அங்கு தோட்டத்தில் புதிதாக பள்ளம் தோண்டியிருந்ததை கண்டோம். அப்போது கொலை நடந்திருக்கிறது என்பதை முடிவு செய்தோம். உடனடியாக கிருஷ்ணா எங்கே செல்கிறார் என்பதை அறிந்த போது அவரும் ரவியும் ஆந்திராவில் ஓங்கோலில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆந்திர போலீஸாரின் உதவியை நாடி அவர்களை கைது செய்தோம். அவர்களிடம் இருந்து ஒரு சின்ன பொருள் கூட மிஸ்ஸாகாத அளவுக்கு அனைத்தையும் கைப்பற்றினோம். வீட்டின் சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்க் என அனைத்தையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தோம் என்றார்.