அதிமுக செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களில் பேசக்கூடாது.. மீறினால்.. ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட கட்சி தலைமை!
சென்னை: அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் ஊடகங்களில் எந்த கருத்தும் தெரிவிக்கக் கூடாது என கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
அதிமுக கட்சிக்குள் பெரும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என எம்எல்ஏக்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பங்கேற்றனர். ஒற்றை தலைமை தேவை என்ற கருத்து நீடிக்கும் நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
மறு அறிவிப்பு வரும் வரை
இந்நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
மறு அறிவிப்பு வரும்வரை எந்த ஒரு கருத்தையும் கூற கூடாது என அதிமுக தலைமை அறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை பாயும்
அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி ஊடகங்களிடம் பேசினால் நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என அக்கட்சி தலைமை எச்சரித்துள்ளது. அதிமுகவில் அடுத்த கட்ட அரசியல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் யாரும் ஊடகங்களில் கருத்துக்கூற வேண்டாம் என்றும் அதிமுக தலைமைக் கழகம் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கட்சியின் கருத்தாக
தங்களின் சொந்தக்கருத்துக்களை கட்சியின் கருத்தாக தெரிவிப்போர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சி தலைமை எச்சரித்துள்ளது.
நிர்வாகிகளின் ஒப்புதல்
அதிமுகவின் ஒழுங்கு, கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கட்சி நிர்வாகிகளின் ஒப்புதலைப் பெற்ற கருத்துகளை மட்டுமே தெரிவிக்க செய்தி தொடர்பாளர்களுக்கு உரிமை உண்டு என்றும் அதிமுக தலைமை கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக விரோத செயல்
இதற்கு முன் சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் தங்கள் செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களில் பேசுவதை தடை செய்திருந்தனர்
ஊடகங்களில் அதிமுக செய்திதொடர்பாளர்கள் கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டிருப்பது ஜனநாயக விரோத செயல் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.