பொதுக்குழுவுக்கு சென்றபோது கோர விபத்து.. சிகிச்சை பலனின்றி 2 பேர் பலி- மதுராந்தகம் அருகே சோக சம்பவம்
செங்கல்பட்டு : அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு சென்ற வேனும் கன்டெய்னர் லாரி ஒன்றும் மதுராந்தகம் அருகே மோதியதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னைக்கு வருகை தந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த அதிமுக நிர்வாகிகள் வந்த வேன் மதுராந்தகம் அருகே விபத்தில் சிக்கியது.

அதிமுக பொதுக்குழு
சென்னை வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் சென்னையை நோக்கி படையெடுத்தனர்.

பொதுக்குழு உறுப்பினர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள உளுந்தை கிராமத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் வேன் ஒன்றில் இன்று காலை 5 மணிக்கு புறப்பட்டு சென்னையில் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்து கொண்டிருந்தனர்.

திடீர் விபத்து
அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து மாற்று சாலையில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மற்றும் வேன் மீது பயங்கரமாக மோதியது.

15க்கும் மேற்பட்டோர் படுகாயம்
இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த 13 பேரும், ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 6 பேரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மேல்மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

2 பேர் பலி
இந்த விபத்தில் சிக்கியவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பொதுக்குழு கூட்டத்திற்குச் சென்ற வேன் விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications