நிவாரண உதவிகளில் ஆர்வம் காட்டாத அதிமுக நிர்வாகிகள்... எடுபடாத ஓ.பி.எஸ். கோரிக்கை
சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் விவகாரத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவை விட எதிர்க்கட்சியான திமுகவே முன்னணியில் இருக்கிறது.
திமுகவுக்கு எந்த வகையிலும் குறையாத வகையில் நிவாரண உதவிகள் வழங்குமாறு கட்சி நிர்வாகிகளிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டும் அதில் யாரும் ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை.
ஒரு சில இடங்களில் மட்டும் தனிப்பட்ட முறையில் சில அதிமுக நிர்வாகிகள் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
பசி பட்டினி
கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலி பெற்று பிழைப்பு நடத்திய ஏராளமான குடும்பங்கள் பசி பட்டினால் வாடி வருகின்றன. அரசியல் கட்சியினர் தங்களால் இயன்ற உதவிகளை நிர்வாகிகள் மூலம் அவர்களுக்கு செய்து கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் திமுகவினர் நிவாரண உதவிகள் வழங்கும் விவகாரத்தில் ஸ்டாலினின் உத்தரவுக்கு ஏற்ப சுற்றி சுழல்கின்றனர்.
அறிவுறுத்தல்
திமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருவதாக உளவுத்துறை மூலம் கிடைத்த தகவலை அடுத்து, அதிமுகவினரும் நிவாரண உதவிகளில் கவனம் செலுத்த வேண்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் கேட்டுக்கொண்டதை பெரும்பாலான நிர்வாகிகள் காதில் வாங்கிக்கொண்டதாக தெரியவில்லை. இதனால் ஓ.பி.எஸ். இது குறித்து தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் வேதனை தெரிவித்து புலம்பியிருக்கிறார்.
தனிப்பட்ட முறை
கிருஷ்ணகிரி, தேனி, கரூர், போன்ற சில மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக தனது சொந்த நிதியில் இருந்து ஏற்கனவே ரூ.25 லட்சத்தை அளித்த கேபி முனுசாமி, மேலும் சில லட்சங்களை செலவிட்டு தனிப்பட்ட முறையில் தனது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.
போட்டி போட்டு
இதேபோல் ஓ.பி.எஸ்.ஸின் சொந்தமாவட்டமான தேனியில் திமுகவை காட்டிலும் நிவாரண உதவிகளை வாரி வழங்கி வருகிறார் ரவீந்தரநாத் குமார் எம்.பி.. ஆட்டோ ஓட்டுநர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்துநர்கள் என பலரையும் அழைத்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை வழங்குகிறார். இதேபோல் கரூரில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது எம்.ஆர்.வி.டிரஸ்ட் மூலம் மாவட்டம் முழுவதும் நிவாரண பொருட்கள் தந்துதவுகிறார். செந்தில்பாலாஜியோடு அவர் போட்டி போட்டு நிவாரண உதவிகள் செய்வது எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மேலும் செல்வாக்கை அதிகரித்துள்ளது.