17 நாட்களுக்கு பிறகு தலைமைச் செயலகத்தில் முதல்வர்...! அதிகாரிகள் பர பர
Recommended Video
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 17 நாட்களுக்கு பிறகு இன்று தலைமைச் செயலகம் வந்ததால் தேங்கிக் கிடந்த கோப்புகளை அதிகாரிகள் தூசு தட்டி எடுக்கத் தொடங்கினர்.
கடந்த மாதம் 28-ம் தேதி வெளிநாடுகளுக்கு புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செப்.10-ம் தேதி அதிகாலை தமிழகம் திரும்பினார். அவர் வெளிநாடுகளுக்கு புறப்படுவதற்கு முன், கடைசியாக ஆகஸ்ட் 26-ம் தேதி கோட்டைக்கு சென்றார். அப்போது அனைத்து துறை உயர் அதிகாரிகளை அழைத்த அவர், அரசு நிர்வாகத்தில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என அறிவுரை கூறியிருந்தார்.
இந்நிலையில் வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு செவ்வாய்கிழமை காலை சென்னை வந்த முதலமைச்சர், கோவை, சேலம் மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் சென்றுவிட்டார். வெளிமாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு புதன்கிழமை சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி, நேற்று தலைமைச் செயலகம் செல்லவில்லை. முகாம் அலுவலகத்தில் இருந்து கோப்புகளை பார்த்தார்.
வெளிநாடு பயணம் சென்று திரும்பியதால் தன்னை சந்திக்க நேரம் கேட்டவர்களுக்கு நேரம் ஒதுக்கி நேற்று அவர்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. கருணாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் முதல்வரை முகாம் அலுவலகத்தில் வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்துக்கூறினர்.
முதலமைச்சர் இல்லாததால் தலைமைச் செயலக அதிகாரிகள் மத்தியில் பெரிய சுறுசுறுப்பு இல்லாத நிலையே நேற்று வரை காணப்பட்டது. இதனிடையே இன்று முதல்வர் கோட்டைக்கு சென்றதால் அதிகாரிகள் மீண்டும் பரபரப்பாக இயங்கத் தொடங்கினர்.