டிஎன்பிஎஸ்சி தேர்வு.. சுட்டிக்காட்டிய ராமதாஸ்.. புது அட்டவணையை வெளியிட்ட தேர்வாணையம்.. வரவேற்பு
சென்னை: 2023ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி அட்டவணையில் குரூப் 1 தேர்வு இடம்பெறாததை பாமக நிறுவனர் ராமதாஸ் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி சார்பில் இன்று திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குரூப் 1 தேர்வு இணைக்கப்பட்டு இருப்பதற்கு ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டில் தமிழக அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணையை சில நாட்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதில் குரூப் 1, குரூப் 2/2ஏ தேர்வு, குரூப் 4 தேர்வுகள் 2023ல் நடைபெறாதது தெரியவந்தது. இதனால் அந்த தேர்வை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.
தமிழக வனத்துறையில் நல்ல வேலை.. மாதம் ரூ.56,000 முதல் ரூ.2.05 லட்சம் ஊதியம்.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை
இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் உள்பட பல்வேறு தரப்பினர் டிஎன்பிஎஸ்சிக்கு கோரிக்கை விடுத்தனர். அதாவது அடுத்த ஆண்டு குரூப் 1, குரூப் 2/2ஏ, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். இதனை டிஎன்பிஎஸ்சி உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இன்று டிஎன்பிஎஸ்சி சார்பில் திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை (TNPSC Updated Annual Planner) வெளியிடப்பட்டது.
குரூப் 1 தேர்வு இணைப்பு
அதன்படி குரூப் 1 தேர்வு தொடர்பான அறிவிக்கை 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப் 1க்கான முதல்நிலைத் தேர்வு 2023ம் ஆண்டு நவம்பர் 23ல் நடைபெறும் என்றும் , முதன்மைத் தேர்வு 2024 ஜுலை 24ம் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் வரவேற்பு
இந்நிலையில் டிஎன்பிஎஸ்ஸியின் இந்த முடிவை பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ தமிழ்நாட்டில் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட முதல் தொகுதி(குரூப் I) பணிகளுக்கு தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும்; நவம்பர் மாதத்தில் முதல் நிலைத் தேர்வு, 2024 ஜூலையில் முதன்மை தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது.
இடைவெளி குறைக்க வேண்டும்
டிஎன்பிஎஸ்சி அடுத்த ஆண்டு மிகக்குறைந்த பணிகளுக்கு தேர்வு நடத்துவதையும், முதல் தொகுதி, இரண்டாம் தொகுதி, மூன்றாம் தொகுதி பணிகளுக்கு தேர்வு நடத்தப்படாததையும் சுட்டிக்காட்டியிருந்தேன். அதையேற்ற, முதல் தொகுதி தேர்வுகளை சேர்த்து புதிய பட்டிலை வெளியிட்டதில் மகிழ்ச்சி. முதல் தொகுதி பணிகளுக்கான முதல்நிலை தேர்வுகளுக்கும், முதன்மை தேர்வுகளுக்கும் இடையே 9 மாத இடைவெளி மிகவும் அதிகம். இதை குறைக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் தேர்வு
ஆண்டுக்கு ஒருமுறை முதல் தொகுதி பணிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படுவதை டிஎன்பிஎஸ்சி உறுதி செய்ய வேண்டும். இரண்டாம் தொகுதி மற்றும் மூன்றாம் தொகுதி பணிகளுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட வேண்டும். அனைத்து துறைகளிலும் 4 லட்சத்திற்கும் கூடுதலாக காலியிடங்கள் உள்ள நிலையில் அவற்றை அடுத்த 3 ஆண்டுகளில் 4 தவணைகளில் நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
குரூப் 2/2ஏ, குரூப் 4 இல்லை
இருப்பினும் கூட இந்த திருத்தப்பட்ட தேர்வு திட்ட அட்டவணையில் குரூப் 2/2ஏ தேர்வு தொடர்பான எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. 2023ல் குரூப் 4 தேர்வு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை இருந்தாலும் அதனை டிஎன்பிஎஸ்சி பரிசீலனை செய்யாத நிலையில் குரூப் 1 பணியிடங்கள் மட்டும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.