ரூ.9,602 கோடி.. மோடி முன் முதல்வர் வைத்த கோரிக்கை.. தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட ஜிஎஸ்டி நிலுவை!
சென்னை: தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.9,602 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகையை விடுவித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக சரக்கு மற்றும் சேவை வரி கொண்டு வரப்பட்டது.
இந்த ஜிஎஸ்டி வரி வருவாயை மாநில அரசுகளும், மத்திய அரசும் பகிர்ந்து கொள்கின்றன. அதே சமயம் முந்தைய வரிகள் நீக்கப்பட்ட போது மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
2014-க்கு முன்பு ஊழல்களில் சிக்கி கிடந்த இந்தியா மீண்டெழுந்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்
ஏன் இழப்பீடு
அதாவது முன்பு மாநில அளவில் பல்வேறு சிறு சிறு வரிகள் அமலில் இருந்தது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் அந்த வரிகள் அனைத்தும் நீக்கப்பட்டது. ஜிஎஸ்டியில் இருக்கும் எஸ்ஜிஎஸ்டி பிரிவில் இருந்து மாநிலங்களுக்கு ஷேர் சென்றது. மற்ற வரிகளின் இழப்பு காரணமாக மாநில அரசுகள் பொருளாதார ரீதியாக பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இதை சரி செய்ய ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. 2017-2022 வரை இந்த இழப்பீடு வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
எவ்வளவு
இடையில் அவ்வப்போது இழப்பீடு தொகையை வழங்க தாமதம் ஏற்பட்டது. முன்னதாக தமிழ்நாட்டிற்கு 20 ஆயிரம் கோடி வரை இழப்பீடு மீதம் இருந்தது. இதில் பாதி தொகை அப்போது மத்திய அரசு மூலம் விடுவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த முறை டெல்லி பயணத்தின் போது முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய மீதம் உள்ள ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை வழங்க கோரிக்கை விடுத்தார்.
சென்னை வருகை
அதன்பின் பிரதமர் மோடி கடந்த வாரம் சென்னைக்கு வந்திருந்த போது முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஜிஎஸ்டி குறித்து கோரிக்கை வைத்தார். 15-5-2022 அன்று வரை தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய GST இழப்பீடு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி முன்னிலையில் கோரிக்கை விடுத்தார். அதோடு ஜிஎஸ்டி தொகை இழப்பீடு காரணமாக மாநிலங்கள் இன்னும் நிவர்த்தி பெறவில்லை.
மேலும் 2 ஆண்டுகள்
இழப்பீடு போதுமானதாக இல்லை. இதனால் வருவாய் சீரடையவில்லை. இதனால் இழப்பீட்டை இன்னும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.9,602 கோடியை விடுவித்தது மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மொத்தமாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகையான ரூ.86,912 கோடியை விடுவித்தது மத்திய அரசு
வழங்கியது மத்திய அரசு
மே 31-ஆம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையையும் இதன் மூலம் மத்திய அரசு விடுவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் இழப்பீட்டு தொகை அனைத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் மத்திய அரசு தொகையை விடுத்துள்ளது.
பொதுவாக ஜிஎஸ்டி நிலுவை எவ்வளவு வழங்கப்பட வேண்டும் என்று கவுன்சில் மூலம் முடிவு எடுக்கப்படும். அதன்பின் மத்திய அரசு தங்கள் நிதி நிலையை பொறுத்து அந்த தொகையை காலாண்டு வாரியாக வழங்கும். இந்த வருடம் ஜூன் மாதத்தோடு ஜிஎஸ்டி நிலுவை தொகை வழங்குவது முடிவிற்கு வருகிறது. இந்த நிலையில் முன்கூட்டியே மே 31ம் தேதி நிலுவை தொகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது பற்றி மத்திய அரசு முடிவு எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.