கோபியில் மீண்டும் செங்கோட்டையன் போட்டி? எடப்பாடி பழனிசாமிக்கு டென்ஷன் ஏற்றும் முன்னாள் அமைச்சர்?
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தவெக சார்பில் நாளை முதல் விருப்பமனு விநியோகிக்கப்படும் நிலையில் கோபி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தவெகவின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. விஜய்யின் இலக்கு தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதுதான்.

புதிய கட்சியான தவெகவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விஜய் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் எம்எல்ஏ.
அதிமுகவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவன் நான். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றுதான் நான் கூறினேன். ஆனால் என்னை ஒரு நொடியில் உறுப்பினர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
அதிமுகவில் பலரை இணைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி தற்போது முனைப்பு காட்டி வருகிறார். இந்த நிலையில் வரும் தேர்தலில் கோபி தொகுதியில் நான் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளிக்கவுள்ளேன்.
தமிழகத்தை தவெகதான் ஆளப்போகிறது. நான் காமெடியாக கூறவில்லை, மத்திய பட்ஜெட் குறித்து நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பேசுவோம். தவெக தனித்து போட்டியிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மவுனம் வெற்றிக்கு அறிகுறி. மவுனமாக இருந்து வெற்றியை சாதிக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியிருந்தார்.
தவெகவில் நாளை முதல் விருப்பமனுக்கள் பனையூர் கட்சி அலுவலகத்தில் விநியோகம் செய்யப்படவுள்ளது. இதை நிர்வாகிகள் பெற்றுக் கொள்ளலாம் என தவெக தலைமை அறிவித்துள்ள நிலையில் செங்கோட்டையன் கோபி தொகுதியில் போட்டியிடுவது குறித்து கூறியிருக்கிறார்.
கோபி தொகுதி அதிமுகவின் கோட்டை என சொல்லலாம். அந்த அளவிற்கு அக்கட்சிக்கு அங்கு வெற்றி வாய்ப்புள்ளது. 1980, 1984, 1989, 1991, 2006, 2011, 2021, 2021 ஆகிய சட்டசபை தேர்தல்களில் செங்கோட்டையன் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளார்.
கிட்டதட்ட அந்த தொகுதிக்கு 30 ஆண்டுகளுக்கு மேல் எம்எல்ஏவாக இருந்திருக்கிறார். அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என இவர் குரலை உயர்த்தியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் இவர் திமுகவில் இணைவார் என சொல்லப்பட்டது.
ஆனால் திடீரென தவெகவில் இணைந்தார். அங்கு அவர் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். மேலும் 4 தொகுதிகளின் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications