ஏர் இந்தியா விமான விபத்தில் பிழைத்தவர்! நீண்ட நேரம் எங்கே இருந்தார்? பல மணி நேரம் கழித்து வந்தது ஏன்
அகமதாபாத்: அகமதாபாத்தில் நேற்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில், விமானத்தில் பயணித்த ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த மற்ற 241 பேரும் உயிரிழந்தனர். இவர் எங்கிருந்து மீட்கப்பட்டார் என்று மீட்பு பணியாளர் ஒருவர் ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
விபத்தில் உயிர் பிழைத்த பயணி
ஏர் இந்தியா ஏஐ171 விமானம் விபத்துக்குள்ளானதில் ரமேஷ் விஸ்வக்குமார் புச்சர்வாடா என்பவர் உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்து அகமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் தகவல் தெரிவிக்கையில், "11ஏ இருக்கையில் பயணித்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்" என்றார். ஏஎன்ஐ செய்தி நிறுவனமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், விபத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட வீடியோவில் காயமடைந்த ரமேஷ் ஆம்புலன்ஸை நோக்கி நடந்து சென்றதாகவும், மற்றவர்களின் நிலை குறித்து அங்கிருந்தவர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்தனர்.

அவசர வழி இருக்கை
ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் 11ஏ இருக்கை எகானமி வகுப்பில் முதல் வரிசையில் உள்ளது. இந்த ஜன்னல் இருக்கை விமானத்தின் வலது பக்கத்தில், விமானத்தின் இறக்கைக்கு இரண்டு வரிசைக்கு முன்னதாக அமைந்துள்ளது. நெருக்கடியான சமயங்களில் வெளியேறும் அவசர வழியை ஒட்டியே இந்த 11ஏ இருக்கை அமைந்துள்ளது.
மீட்பு பணியாளர் பேட்டி
இவர் எங்கிருந்து மீட்கப்பட்டார் என்று மீட்பு பணியாளர் ஒருவர் ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், ரமேஷ் தனியாக எல்லாம் இல்லை. அவர் நீண்ட நேரம் வெளியே வராமல் இருந்ததற்கு காரணம், அவர் விமான இடிபாடுகளுக்கு கீழ் சிக்கி இருந்தார். விமானம் உடைந்து நொறுங்கியதற்கு கீழ் பாகத்தில் சிக்கி இருந்தார். அவசர கதவு வழியாக வெளியேறிய அவர்.. கீழே குதித்த பின்.. விமானத்தின் பாகங்கள் அவர் மீது விழுந்துள்ளன. இதில்தான் அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால்தான் நீண்ட நேரம் கழித்தே அவர் மீட்கப்பட்டார். பிற்பகல் மீட்பு பணி தொடங்கியும் கூட மாலையே அவர் மீட்கப்பட்டார்.
ரமேஷ் விஸ்வக்குமார் தப்பிய விதம்
விபத்து நடக்கும் சில நொடிகளுக்கு முன் பயணிகளிடம் எமர்ஜென்சி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ரமேஷ் உஷாராக இருந்துள்ளார். சீட் பெல்ட் அணியாத அவர், விமானம் தரைக்கு அருகே வந்து மோதும் நொடியில் சுதாரித்து, விமானத்தில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி வெளியே குதித்து காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.
லண்டன் கேட்விக்கிற்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளில் விபத்துக்குள்ளானது. ராடார் தகவல்களின்படி, விமானம் 625 அடி உயரம் மட்டுமே எட்டியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விமானம் பி.ஜே. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை விடுதி மீது மோதியது.
230 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்களுடன் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 1:39 மணிக்கு விமானம் புறப்பட்டது. புறப்பட்ட ஒரு நிமிடத்தில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இந்த விபத்தில் 241 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து மேலும் தகவல்களைப் பெற ஏர் இந்தியா உதவி எண்களை அறிவித்துள்ளது. பயணிகள் 1800 5691 444 என்ற எண்ணிலும், வெளிநாட்டு குடிமக்கள் +91 8062779200 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
அகமதாபாத்தில் நிகழ்ந்த இந்த ஏர் இந்தியா விமான விபத்தில் ஒருவர் உயிர் பிழைத்ததும், 241 பேர் உயிரிழந்ததும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications