எம்ஜிஆரின் தொண்டர் விரட்டியடிப்பு.. அப்போ தேர்தல் எதுக்கு? தொண்டர்கள் கேள்வி.. ஈபிஎஸ்ஸுக்கு மைனஸ்!
சென்னை: எம்ஜிஆர் காலத்து தொண்டர் ஒருவர் விரட்டியடிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த தொண்டர்கள், யாரும் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடாது என்றால் எதற்குதேர்தல் என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அப்போது அதிமுகவின் விதிகள் திருத்தியமைக்கப்பட்டன. மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான உள்கட்சி தேர்தல் வரும் 7ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தனர்.
ஜெய்சங்கர் வீட்ல ஜெயலலிதா..! துப்பாக்கியுடன் சென்ற எம்ஜிஆர்..! குட்டி பத்மினிக்கு நேரம் சரியில்லையா?
வேட்புமனு தாக்கல்
இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்யும் பணிகள் நேற்று முதல் தொடங்கியது. அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் தொடங்கியது. இந்த தேர்தலை நடத்தும் ஆணையர்களாக அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன், தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
சென்னை ஓட்டேரி
இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த ஓமப்பொடி பிரசாத் சிங் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக விண்ணப்ப படிவம் கேட்டிருந்தார். அவருக்கு விண்ணப்ப படிவம் கொடுக்க மறுக்கப்பட்டது. இதையடுத்து உள்கட்சி தேர்தல் சட்டத்திற்கு புறம்பாக நடப்பதாக பேட்டி அளித்தார்.
விரட்டியடிப்பு
அப்போது அங்கிருந்த தொண்டர்கள் சிலர் ஓமப்பொடி பிரசாத்தை தாக்கி வெளியே விரட்டியடித்தனர். இவர் எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் இருந்து வருவது தெரியவந்துள்ளது. எம்ஜிஆர் காலத்து தொண்டருக்கே இந்த நிலையா என மற்ற தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தேர்தல்
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது, தேர்தல் என்றாலே அது ஜனநாயக முறையில் போட்டி போட வேண்டும். ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் மட்டுமே அதிமுகவிற்கு தலைமையேற்க வேண்டும் என்றால் எதற்காக தேர்தலை அறிவித்தார்கள். ஏற்கெனவே இவர்கள்தானே தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள். பிறகு எதற்காக தேர்தலை அறிவித்து பிறர் போட்டியிடுவதை தடுக்கிறார்கள்?
கொடி
கடைசி வரை நாங்கள் கொடியை பிடித்துக் கொண்டு மட்டுமே இருக்க வேண்டுமா? சாமானியர்களையும் தலைவர்களாக்கி, தேர்தலில் சீட்டு கொடுத்து அழகு பார்த்தவர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், அவர்கள் வழியில் வந்தவர்கள் என கூறிக் கொண்டு போட்டியே இல்லாத சூழலை உருவாக்கினால் எப்படி? அதிலும் எம்ஜிஆர் காலத்து நிர்வாகிகளுக்கே இந்த நிலை என்றால் அண்மையில் வந்தவர்களுக்கு என்னவாகும்? என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
எம்ஜிஆர் காலம்
இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில் எம்ஜிஆர் காலத்திலிருந்து முக்கிய பொறுப்பில் இருந்த அன்வர்ராஜா நீக்கத்தால் தொண்டர்கள் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த எம்ஜிஆர் காலத்து தொண்டரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இது போல் எம்ஜிஆரின் தொண்டர்களையே மதிக்காததால் கட்சியில் பலர் அதிருப்தியில் உள்ளனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு இது மைனஸாகியுள்ளது. தேர்தல் என்றால் போட்டி என்பது இருக்க வேண்டும். ஏற்கெனவே தலைமை பொறுப்பில் இருந்து கொண்டு தற்போது தேர்தலை நடத்துகிறார்கள். அப்படியிருக்க தங்கள் இருவரை தவிர யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுப்பதாக எம்ஜிஆர் காலத்து தொண்டர் குற்றம்சாட்டுகிறார். ஏற்கெனவே அதிமுக கரைந்து வருகிறது. இதையெல்லாம் பார்க்கும் தொண்டர்கள் வேறு கட்சிக்கு தாவ வழிவகுக்கும் என்பதை அதிமுக தலைமை உணராதது ஏனோ தெரியவில்லை என்றனர்.