அதிமுக பொதுக்குழு வழக்கு...எடப்பாடி பழனிசாமி அப்பீல்..ஹைகோர்ட்டில் ஓபிஎஸ் கேவியட் மனு
சென்னை: எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு வழக்கில் தன் தரப்பு வாதத்தை கேட்ட பிறகே உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ள நிலையில் ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
Recommended Video
அதிமுக ஜூலை 11 பொதுக்குழு செல்லாது எனவும் மீண்டும் பொதுக்குழு நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் அறிவுறுத்திய உயர்நீதிமன்றம், கட்சியில் ஜூன் 23 க்கு முன்பு இருந்த நிலையே தொடர உத்தரவு பிறப்பித்துள்ளது. தீர்ப்பு வெளியானதையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள், அவரது இல்லம் முன் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாகவும், பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் உள்ள தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதிகார வரம்பு இல்லை
ஏற்கனவே பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் அவர் வகித்த பதவியும் கலைக்கபட்டுவிட்டதாகவும், அதிமுகவின் பெரும்பான்மையினர் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். கட்சியின் நிர்வாகம் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றம் கருத்து தெரிவிக்க எந்த அதிகார வரம்பும் இல்லை. இந்த தீர்ப்பு கட்சி செயல்பாட்டில் மட்டுமல்லாமல் பெரும்பான்மை உறுப்பினர்களில் விருப்பத்தில் தலையிடுவதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

ஒற்றைத்தலைமை
கட்சி ஒற்றை தலைமையை நோக்கி செல்லும் நிலையில் இரட்டை தலைமை வேண்டும் என்ற ஒரு தனி நபரின் விருப்பத்தை பிரச்சாரம் செய்யும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. உட்கட்சி செயல்பாடு குறித்து நீதிபதி சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இது நீதிமன்றம் ஆய்வுக்குட்பட்டது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை
ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில், ஜூன் 23ம் தேதிக்கு முன் உள்ள நிலையே தொடர வேண்டும் என தீர்ப்பு வழங்கி உள்ளதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் தனது மனுவில் கேட்காத கோரிக்கைகளுக்கு நிவாரணமாக தீர்ப்பு வழங்கி உள்ளார். இதற்காகவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

2,460 பொதுக்குழு உறுப்பினர்கள்
ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் 2,460 உறுப்பினர்கள் கலந்து கொண்டது, எழுத்து பூர்வமான நோட்டீஸ் அளிக்க வேண்டியது இல்லை என்ற கட்சி விதி, பொதுக்குழுவிற்கே அதிகாரம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பணியாற்ற முடியாத நிலை உள்ளது என்பன போன்ற முக்கிய விவரங்களை புறக்கணித்து தனி நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தீர்ப்புக்கு தடை விதிக்க கோரிக்கை
ஏற்கனவே நடந்து முடிந்த பொதுக்குழுவுக்கு எதிராக பிறப்பிக்கபட்டுள்ள இந்த தீர்ப்பு சட்டப்படி ஏற்றுகொள்ளதக்கதல்ல, அந்த வழக்கு செல்லாததாகிவிட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சிக்கு எதிராக பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்திருக்க வேண்டும். பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகளில் கட்சியினர் அதிருப்தியில் இருந்தனர். ஒற்றை தலைமை வேண்டும் என திடீரென முடிவெடுக்கவில்லை. இருவரும் இணைந்து செயல்பட முடியாத ஒரு நிலையில், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ் கேவியட் மனு
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு வழக்கில் தன் தரப்பு வாதத்தை கேட்ட பிறகே உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ள நிலையில் ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications