காவிரி நீர் திறப்பு விவகாரத்தில்... கர்நாடக அரசின் செயல் கண்டனத்திற்குரியது -ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் கண்டனத்திற்குரியது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் இதில் தலையிட்டு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
புலி வருகிறது கூடலூர் நோக்கி.. 8 நாட்களுக்கு பிறகு.. கேமராவில் பதிவானது.. கிராம மக்களுக்கு வார்னிங்
இது தொடர்பாக ஓ.பி.எஸ்.விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு;
உயிர்நாடி
கால்வாய்ப் பாசனத்தைச் சார்ந்த நிலங்களில் 85 விழுக்காடு நிலங்கள் தமிழ்நாட்டின் உயிர் நாடியாக விளங்கும் காவிரி நீரை நம்பியுள்ளன என்பதையும், காவிரி நீரைப் பயன்படுத்துவதில் தமிழ்நாட்டிற்குள்ள உரிமை மிகப் பழமை வாய்ந்தது என்பதையும் அறிந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மிகப் பெரிய சட்டப் போராட்டத்தின் மூலம் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து சாதனை படைத்தார். பின்னர், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை உச்ச நீதிமன்றத்தால் சற்று மாற்றியமைக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம்
இதனைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறைக் குழு ஆகியவை அமைக்கப்பட்டன. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முக்கியமான பணி, காவிரி நதி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் உதவியுடன் காவிரி நீரின் இருப்பு, பங்கீடு, ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாட்டைக் கண்காணித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துதல் ஆகும்.
காவிரி நீர்
இந்தச் சூழ்நிலையில், காவிரி நதிநீர் ஒழுங்குமுறைக் குழுவின் கூட்டம் 11-10-2021 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், செப்டம்பர் மாதம்வரை தரப்பட்டிருக்க வேண்டிய 25.84 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா இன்னும் விடுவிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் தரப்பட வேண்டிய 14 டி.எம்.சி. தண்ணீரையும் சேர்த்து மொத்தமாக சுமார் 40 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவருக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
கண்டனம்
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் கர்நாடகா, தமிழ்நாட்டிற்குத் தேவையான தண்ணீரை இன்னமும் திறந்துவிடாது மவுனம் காப்பது கண்டனத்திற்குரியது. கர்நாடக அரசின் இந்த மவுனம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதற்குச் சமம். இதன் மூலம் டெல்டா விவசாயிகள் துர்ப்பாக்கியமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். எனவே, தமிழ்நாடு முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மத்திய அரசுக்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, அதன் மூலம் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நீரைப் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.