மெகா சிக்கல்.. எடப்பாடிக்கு கேட் போட காத்திருக்கும் தேனி டீம்! ஓகே சொல்வாரா ஓபிஎஸ்! அப்பவே சொன்னாரே?
சென்னை : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக அக்கட்சியின் இரு தரப்பினரும் கூறி வந்தாலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. தொடர்ந்து சின்னம் முடக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
அதிமுக தொடர்ந்து குழப்பமான சூழலில் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு முக்கியமான ஒரு சவால் காத்திருக்கிறது. அது தமிழக சட்டசபைக்கு நடக்கவிருக்கும் திமுக ஆட்சிக் காலத்தில் வரும் முதல் இடைத்தேர்தல்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா திடீரென உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதிக்கு ஆறு மாதங்களில் இடைத்தேர்தல் நடத்த வேண்டி இருக்கிறது.
இபிஎஸ் இலக்கு..ஈரோடு கிழக்கு! எடப்பாடி பழனிசாமியை சுத்துப் போடும் 'மாஜிக்கள்’! இப்பவே ஆரம்பிச்சாச்சு
ஈரோடு இடைத் தேர்தல்
பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியை வெற்றி பெறும் என்றாலும் அதிமுகவை பொறுத்தவரை இந்த தேர்தலானது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. காரணம் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் இருக்கும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். திமுகவை பொருத்தவரை அந்தக் கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி அது. அதேபோல் அதிமுகவில் அந்த தொகுதி ஜிகே வாசனின் தமாகவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. திமுகவை பொருத்தவரை காங்கிரசுக்கு அந்த தொகுதியை ஒதுக்கும் என கூறப்படுகிறது.
இபிஎஸ் - ஓபிஎஸ் மோதல்
அதிமுகவை பொருத்தவரை இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்திருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையான மோதல் வலுப்பெற்று இருக்கும் நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக இரு தரப்பும் எதிர்நோக்கி உள்ளது. அதே நேரத்தில் தேர்தலுக்கு முன்னதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இரட்டை இலை
இந்த நிலையில் தேர்தல் போட்டியிடுவதை அதிமுக எடப்பாடி தரப்பு உறுதி செய்துநிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை எடப்பாடி தரப்பின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. தற்போதைய சூழலில் ஓபிஎஸ் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிப்பார்கள். எனவே இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இருவருமே சின்னத்துக்கு உரிமை கோரி நிலையில் ஆர்கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சி தேர்தல்
இந்நிலையில் தற்போது அதே நிலைமைதான் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் ஏற்படும் என்கின்றனர் அதிமுக விவகாரங்களை உற்று நோக்கும் அரசியல் நிபுணர்கள். அதே நேரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் இருவருமே கையெழுத்திடாததால் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
ஓகே சொன்ன ஓபிஎஸ்
ஆனால் அப்போது வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதற்காக கையெழுத்திட தயார் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி தரப்புக்கு கடிதம் எழுதினார். ஆனால் அந்த கடிதத்தை எடப்பாடி தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை இந்நிலையில் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பாஜக தலைமை விரும்பும் நிலையில் ஒருவேளை அதிமுக கூட்டணி தரப்பில் அதிமுகவே தேர்தலில் போட்டியிட்டாலும் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா அல்லது கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலை போல எடப்பாடி தரப்பு ஆதரவாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க ஓபிஎஸ் கையெழுத்திடுவாரா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.
என்ன நடக்கும்?
இரு தரப்புமே தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என கடுமையாக போராடிவரும் நிலையில் நிச்சயம் ஓபிஎஸோ எடப்பாடியோ விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருக்கிறது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். இந்த சிக்கலை எடப்பாடி பழனிச்சாமி எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை காலம்தான் நிர்ணயிக்கும்.