"வேலையை உடனே ஆரம்பிக்கனும்.." அதிமுக மாசெக்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி பிரச்சனைகள் இது குறித்து எல்லாம் கவலைப்பட வேண்டாம் அதனை நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் வேலையை பாருங்கள் என முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி 'அசைன்மென்ட்' ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. அதிமுகவின் உச்சபட்ச அதிகாரமிக்க பதவியான பொதுச் செயலாளர் பதவியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
எப்போதும் போல் தான் நம்பர் 2 ஆகவே இருக்க முடியாது என ஓபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஜெயலலிதா இருந்த பொதுச் செயலாளர் பதவி அவர் வகித்ததாகவே இருக்கட்டும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே தொடரட்டும் என தொடர்ந்து அவர் மல்லுக்கட்டி வருகிறார்.
2026ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி.. அன்புமணி ராமதாஸ் அதிரடி! அதிமுக கூட்டணி ஓவர்?
ஒற்றைத் தலைமை
உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை இந்த மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தீர்ப்பு வெளியாகும் அவ்வாறு வெளியாகும் தீர்ப்பு என்னவாக இருக்கும் என இரு தரப்புமே மிகுந்த ஆர்வத்துடனும் பதட்டத்துடனும் எதிர்நோக்கி வருகிறது. இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான வேலைகளும் சூடு பிடித்திருக்கின்றன. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அது தொடர்பான வேலைகளை தற்போது இருந்தே அரசியல் கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தை தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடத்தி முடித்துள்ளது. அதிமுக சார்பிலும் 51 வது ஆண்டு துவக்க விழாவினை தேர்தலுக்கான களமாகவே அதிமுக கருதுகிறது. பல முன்னாள் அமைச்சர்கள் தங்கள் பகுதிகளில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் சசிகலா டிடிவி தினகரன் ஆகியோரை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியை பாஜக தலைமை வற்புறுத்தி வருவதாகவும் அதனை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி
இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வமும் ஒரு மனுதாரராக சேர்ந்துள்ளார். இந்த பொதுக்குழு செல்லும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார். இந்த வழக்குதான் தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த அதிமுக பொதுக்குழு வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.. தற்போது வழக்கு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான்ஷு துலியா அமர்விற்கு மாற்றப்பட்டு உள்ளது. இதில்தான் நேற்று எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடைபெற்றது.
முக்கிய உத்தரவு
இதை அடுத்து மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் தலைமை கழக நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வாய்மொழியாக எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஒற்றை தலைமை விவகாரம் வழக்குகள் மற்றும் பாஜகவின் அழுத்தங்களை பற்றி எல்லாம் பொது வெளியில் பேசி கூடுதல் நெருக்கடியை உருவாக்க வேண்டாம். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான வேலைகளில் தற்போது இருந்தே கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளாராம்.
நாடாளுமன்ற தேர்தல்
கடந்த முறை தேர்தலில் அதிக வாக்குகள் கிடைத்த தொகுதிகள், அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் தொகுதிகள், தற்போது பதவியில் இருக்கும் எம்பிக்கள் செயல்பாடுகள், அவர்களது நிறை குறைகள், அதிமுகவில் தகுதியான வேட்பாளர்கள், உள்ளிட்டவற்றை தயார் செய்யும் படி கூறப்பட்டுள்ளது. இதை அடுத்து தேர்தலில் தோற்ற முன்னாள் அமைச்சர்கள் பலரும் மீண்டும் தேர்தலில் போட்டியிடலாமா என ஆலோசித்து வருகின்றனர். பலர் தங்கள் வாரிசுகளை களம் இறக்கவும் தயாராகி வருகின்றனர்.
பணிகள் தீவிரம்
இன்னும் சில கால இடைவெளியில் உத்தேச பட்டியல் ஒன்றும் தயார் செய்யப்பட்டு தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. ஒரு வருடம் இருப்பதற்கு முன்பே தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னதாகவே சுற்றுப்பயணம் மேற்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படியும் முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தரவு பறந்து இருக்கிறது. பெரும்பாலான மாவட்டங்களில் எம்பி கனவில் இருக்கும் சிலர் தற்போது மறைமுகமாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர் என்கின்றனர் எடப்பாடி தரப்பு நிர்வாகிகள்.