எப்போ தீபாவளி வரும்னு ஏங்கியிருக்கிறேன்! இன்னைக்கு நினைச்சாலும் அது ஆனந்தமே! ஜெயக்குமார் பிளாஷ்பேக்!
சென்னை: தனது சிறுவயதில் எப்போது தீபாவளி வரும், தீபாவளி வரும் என எதிர்பார்த்து ஏங்கியிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தனது சிறுவயது தீபாவளி கொண்டாட்ட அனுபவங்களை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அது தொடர்பான விவரம் வருமாறு;
நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது! புத்தாடைகள் அணிந்து வாழ்த்து பரிமாறி மக்கள் உற்சாகம்
தந்தை கவுன்சிலர்
''என்னுடைய தந்தை மாநகராட்சி கவுன்சிலராகவும், பாரத் தியேட்டரின் பிரதிநிதியாகவும் பணியாற்றி வந்த காலம் அது. திரையரங்கம் என்றாலே தீபாவளி அன்றும் அதற்கு முந்தைய நாட்களும் மிக விசேஷமான நாட்களாக இருக்கும். அதனால் அன்றைய தினம் வழக்கத்தை விட சற்று தாமதமாகத்தான் அவரால் வீட்டிற்கு வர இயலும்.''
மத்தாப்புகள் கொளுத்தி
''தீபாவளிக்கு முதல் நாள் இரவு எல்லா வீடுகளிலும் மத்தாப்புகள் கொளுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் பிள்ளைகள் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள். அந்த கோலாகலத்தை ரசித்தபடி நானிருப்பேன். அப்பா வரும் வரையில் அவருக்காக என் விழிகளும் மனமும் வாசலை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். அவர் வந்தவுடன் அவருடன் இணைந்து பட்டாசுகள் கொளுத்தி அந்த இரவில் வெளிச்ச வண்ணங்களில் ஒரு விடியலை நான் கண்டிருக்கிறேன். எப்பொழுது விடியும் விடியும் என்ற ஏக்கம் வராத அளவிற்கு பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்திருக்கிறேன்.''
வித விதமான சமையல்
''காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்ததும் தீபாவளிக்காக அப்பா வாங்கித்தந்த புத்தாடைகள், அம்மாவின் வித விதமான சமையல் என்று சொல்லக் கூடிய அளவிற்கு மகிழ்ச்சியில் திளைக்கும் நாளாக தீபாவளி இருக்கும்.ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியை எனக்குள் உண்டாக்கிய நாளாக அப்போது தீபாவளி இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்போதெல்லாம் தீபாவளி என்றாலே ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் தான்.''
தீபாவளியை எதிர்பார்த்து
''எப்பொழுது தீபாவளி வரும், தீபாவளி வரும்... என்ற எதிர்பார்ப்பு எனக்குள் இருந்துள்ளது. அதை இன்றைக்கு நினைத்தாலும் ஆனந்தமாகவே இருக்கிறது. விடியற்காலையில் புதிய ஆடைகளை அணிந்து கொண்டு அம்மாவின் கைப்பக்குவத்தில் தயாரான விதவிதமான இனிப்பு வகைகளையும், உணவுகளையும் சாப்பிட்டு, பட்டாசுகள் வெடித்து விட்டு அதே வேகத்தில் சைக்கிளை எடுத்துக் கொண்டு நண்பர்களின் இல்லம் தேடிச் சென்று அவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டு, அவர்களுடன் வெளியில் புறப்பட்டு அன்றைய தினத்தில் ரிலீஸ் ஆன படங்களில் ஒன்றிரண்டைப் பார்த்து விடுவதுஎன்னுடைய பழக்கமாக இருந்தது.''
சமோசா, டீ
''திரையரங்கில் படம் பார்க்கும் போது சமோசா, டீ என்று நண்பர்களுடன் சாப்பிடுவது என்று அந்த நாள் முழுவதும் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சிக்குரிய நாளாகவே இருந்து கொண்டிருந்தது. மக்கள் விரோத செயல்கள் எங்கு நடந்தாலும் அந்தக் கொடுமைகளை அழித்திடக் கூடியவர்களாக நாம் மாறிட வேண்டும் என்ற எண்ணத்தை நமக்கு வழங்குவதுதான் தீபாவளி. அதர்மத்தை அழித்து வெளிச்சத்தை உலகிற்கு உண்டாக்குவதற்கு நமக்கொரு பாடமாக இருப்பதுதான் தீபாவளி.'' இவ்வாறு ஜெயக்குமார் தனது சிறுவயது தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றி நினைவுகூர்ந்துள்ளார்.