"நான் ஓபிஎஸ் பக்கமா? சான்ஸே இல்ல" எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்திய செங்கோட்டையன்!
சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதனையொட்டி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், கடந்த ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று தீா்ப்பளித்தாா்.
இதனைத்தொடர்ந்து தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.

இபிஎஸ் உற்சாகம்
இதையடுத்து உற்சாகமடைந்த எடப்பாடி பழனிசாமி, சென்னையில் உள்ள வீட்டில் தொண்டர்களை சந்தித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியான பின்னர், மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

செங்கோட்டை வாழ்த்து
கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த செங்கோட்டையன், ஓபிஎஸ் அணிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியது. தற்போது அந்தத் தகவல்களை மறுக்கும் வகையில் சென்னை பசுமை வழிச்சாலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து செங்கோட்டையன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தர்மம் வென்றது
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஜூலை 11ல் நடைபெற்ற பொதுக்குழு செல்லும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் தர்மம் வென்றுள்ளது. இதனால் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி தான் என்று தெரிவித்தார்.

குழப்பத்திற்கு இடமில்லை
தொடர்ந்து, அதிமுகவில் இனி எந்த குழப்பத்திற்கு இடமில்லை. அதிமுகவில் என்றும் இருப்பேன். ஓபிஎஸ் தரப்பிற்கு செல்வேன் என்ற பேச்சிற்கு இடமே இல்லை என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications