அவருக்கு கோடநாடு.. இவருக்கு வீட்டுவசதி.. இப்ப கே.சி.வீரமணி-அத்தனை மாஜி தலைகளுக்கும் கேட் போட்ட திமுக
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிகமாக 654% சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரமேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்க்கள் என பலரும் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பிடியில் சிக்கி வருவது அக்கட்சியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்திலேயே அமைச்சர்கள் மீது பல நூறு பக்க ஊழல் முறைகேடு புகார்களை வெளியிட்டது திமுக. அதேபோல் அதிமுக அரசில் அமைச்சர்களாக பதவி வகித்த போது அவர்களது ஊழல் முறைகேடுகளுக்காக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன.
சட்டசபை தேர்தல் பிரசாரத்திலும் ஒவ்வொரு தொகுதியில் அந்த பகுதி அமைச்சர்கள் மீது பக்கம் பக்கமாக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியது திமுக. மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் மாஜி அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தது திமுக.
வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்து.. விஜிலன்ஸிடம் சிக்கிய மாஜி கே.சி.வீரமணி.. எப்ஐஆர் சொல்வது என்ன?
எம்.ஆர்.விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி
தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்தது முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிமுக மாஜி அமைச்சர்கள் மீதான ஊழல் முறைகேடு புகார்களை தூசு தட்ட தொடங்கினர். முதலில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிக்கினார். அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு போடப்பட்டு அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்த வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஆவின் நிறுவனத்தில் இருந்து ஒன்றரை டன் இனிப்பு ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு கொண்டு இலவசமாக கொடுக்கப்பட்ட முறைகேடும் நிலுவையில் இருக்கிறது.
எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு
இதனையடுத்து அதிமுக ஆட்சிக் காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த எஸ்.பி.வேலுமணி சிக்கினார். அவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பதுக்கிவைக்கப்பட்ட ஏராளமான ஆவணங்கள் சிக்கின. எஸ்.பி.வேலுமணி சிக்கிய அதே நேரத்தில் மாஜி அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீதும் பணமோசடி புகார்கள் எழுந்ததன. தற்போதும் எஸ்..பி. வேலுமணி மீது அடுத்தடுத்து மோசடி புகார்கள் குவிந்து வருகின்றன. மேலும் எஸ்.பி.வேலுமணி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்திய அறப்போர் இயக்கம் வலியுறுத்தி வருகிறது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு-இபிஎஸ்
பின்னர் அதிமுகவின் இருபெரும் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இருவருக்கும் சிக்கல் எழுந்தது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் மறுவிசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. கோடநாடு வழக்கில் தொடர்புடையவர்களின் மர்ம மரண முடிச்சுகள் விரைவில் அவிழும் என தெரிகிறது. ஆனால் இந்த விசாரணையே தம்மை சிக்க வைக்கத்தான் சதி என அலறினார் மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அத்துடன் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்தும் முறையிட்டார். சட்டசபையிலும் அதிமுக எம்.எல்.ஏக்களை வைத்து அமளி, வெளிநடப்பு என எல்லாமும் செய்து பார்த்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் கொங்கு மண்டலத்தில் டேரா போட்டு துருவி துருவி விசாரித்து வருகின்றனர் போலீசார்.
தரமற்ற குடியிருப்புகள்- ஓபிஎஸ்
அதிமுகவின் மற்றொரு பெருந்தலையான ஓ.பன்னீர்செல்வத்துக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் விவகாரம் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகிவிட்டது. சென்னை முதல் குமரி வரை பல்வேறு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டிருக்கும் விவகாரம் நாள்தோறும் தலைப்புச் சேய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.
விஸ்வரூபமெடுத்த குட்கா ஊழல்
இந்த களேபரங்களுக்கு மத்தியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய குட்கா ஊழல் வழக்கு விஸ்வரூபம் எடுத்தது. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மற்றொரு மாஜி அமைச்சர் ரமணா உள்ளிட்டோருக்கு குட்கா ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகாத நபருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
நிலக்கரி ஊழல்
அத்துடன் வடசென்னை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி மாயமான விவகாரத்தில் மாஜி அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி தலை உருண்டது. மிக மிக நூதனமான முறையில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழலை நிலக்கரி கொள்முதலில் இந்த இரு மாஜி அமைச்சர்களும் அரங்கேற்றியதும் அடுத்தடுத்து அம்பலமாகியது. அதேபோல் பணமதிப்பிழப்பு விவகாரத்தின் போது டாஸ்மாக் கடைகளில் செல்லாத ரூபாய் நோட்டுகளை பல கோடி ரூபாய்க்கு மாற்றிய விவகாரத்தில் மாஜி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி மற்றும் எம்.சி.சம்பத் சிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் இப்போது மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி சிக்கியிருக்கிறார்.
சிக்கிய கே.சி.வீரமணி
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, வருமானத்துக்கு அதிகமாக 654% சொத்து குவித்தார் என்பது குற்றச்சாட்டு. இதனடிப்படையில் இன்று காலை முதல் தமிழகம், கர்நாடகா என பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரமேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இத்தனை மாஜி அமைச்சர்கள் சிக்குவதை பார்க்கும்போது அதிமுக பெருந்தலைகள் ஒருவர் கூட தப்ப போவது இல்லை என்றே தெரிகிறது.