ஒதுக்கி வச்சுருவாங்களோ? எடப்பாடி டீமுக்கு கல்தா கொடுக்கும் கடல் மாவட்ட ’மாஜி’! எல்லாம் சுபம் தானாம்!
சென்னை : அதிமுகவில் தற்போது தென் மாவட்டங்களில் திடீரென ஓ.பன்னீர்செல்வத்தின் கை ஓங்கி இருக்கும் நிலையில் பசும்பொன் தேவருக்கு வெள்ளிக்கவசம் அளித்த நிகழ்வு மேலும் செல்வாக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இணைய கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த முன்னாள் அமைச்சர் ஒருவர் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதிமுகவில் அதிகார மோதல் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இடையே நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் யுத்தமானது தற்போதைக்கு முடிவுக்கு வருவதாக இல்லை. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு திருப்பத்தை சந்தித்து வருகிறது.
இந்த நிகழ்வுகள் அதிமுக தொண்டர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் ஆதரவு வட்டம் அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே என்ன நடக்கும் என்பது தெரியும் என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

தொண்டர்கள் ஆதரவு
அதுவரை தாங்கள் இருக்கும் இடத்திலேயே தொடரவும் முடிவு செய்து இருக்கின்றனர். நீதிமன்ற தீர்ப்பு யாருக்கு ஆதரவாக வருகிறதோ அதன் பின்னர் அணி தாவும் படலங்கள் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவின் செல்வாக்கு யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் வகையில் தென் மாவட்டங்களில் ஒரு மறைமுக போட்டியே நடந்து வந்தது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி தங்களுக்கு இருக்கும் தொண்டர்கள் ஆதரவை காட்ட இருதரப்புமே தீவிரமாக தயாராகி வந்தனர்.

ஓ.பன்னீர்செல்வம்
இந்நிலையில் எடப்பாடியின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நூற்றுக்கும் மேற்பட்ட கார்களில் தங்கள் ஆதரவாளர்களோடு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அஞ்சலி செலுத்தி பிரம்மாண்டம் காட்டினார். அதுமட்டுமல்லாமல் யாருமே எதிர்பாராத வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு சுப நாட்களில் அணிவிக்கும் பொருட்டு 10.44 கிலோ எடை கொண்ட வெள்ளி கவசத்தையும் வழங்கினார். ஜெயலலிதா வழங்கிய தங்க கவசம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அணிவிக்கப்படும் என்ற நிலையில் மாதம் 5 அல்லது ஆறு முறை அணிவிக்கும் வகையில் வெள்ளி கவசத்தை வழங்கி ஸ்கோர் செய்துவிட்டார் ஓபிஎஸ்.

அதிகரிக்கும் செல்வாக்கு
இதை எடப்பாடி தரப்பே எதிர்பார்த்து இருக்காது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாயத்தினர் இடையே ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி வராத நிலையில் அவர் மற்றும் அவர் தரப்பில் உள்ள மூத்த முன்னாள் அமைச்சர்களின் மீது கோபப்பார்வை வீசி வருகின்றனர் அப்பகுதி மக்கள். அதன் எதிரொலிதான் ஆர்பி உதயகுமார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இருந்து துரத்தப்பட்டது என்கின்றனர் தென் மாவட்ட ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள். இதனிடையே அதிமுக நிர்வாகிகள் சிலர் ஓபிஎஸ் தரப்புக்கு சென்று விடலாமா என யோசித்து வருகின்றனர்.

அணி தாவும் மாஜி
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் பகுதி மக்களின் ஆதரவு தேவை என்பதை உணர்ந்துள்ள அவர்கள் சமுதாய வாக்கு வங்கிக்காக ஓபிஎஸ் தரப்பில் இருக்க முடிவு செய்து இருக்கின்றனர். குறிப்பாக கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த 'சர்ச்சை' அமைச்சர் ஒருவர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் அது சுமூகமாக முடிந்திருக்கிறதாகவும், ஏற்கனவே இரு அணிகள் இணைய வேண்டும் என முதல் குரல் கொடுத்த போதே எடப்பாடி தரப்பிலிருந்து லேசாக ஓரம் கட்டப்பட்டிருந்த அவர் தற்போது இந்த முடிவினை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. எம்பி ஒருவரும் துணை நிற்க ஓ.பன்னீர்செல்வம் 'மாஜி' சந்திப்பு விரைவில் இருக்கும் என்கின்றனர் ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications