Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரம பதம் மாதிரி எடப்பாடி, ஓபிஎஸ் நிலைமை.. ஏறுது, இறங்குது.. ஜூன் 23 முதல் இப்போ வரை.. ரீவைண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் ஆதரவாக மாறி மாறி தீர்ப்புகள் வருவதால் தொண்டர்கள் ஒருவித குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஜூன் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடியது அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. ஜூலை 11ஆம் தேதியன்று கூடிய பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. ஓபிஎஸ், இபிஎஸ் என இருவரும் மாறி மாறி கோர்ட் படியேறி வருகின்றனர். கடந்த ஜூன் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 02ஆம் தேதி வரைக்கும் அதிமுகவில் நிகழ்ந்து வரும் பரபரப்பான சம்பவங்கள் பற்றி பார்க்கலாம்.

கடந்த ஜூன் மாதம் முதலே ஊடகங்களுக்கு பரபரப்பான தீனி போட்டு வருகிறது அதிமுக. அதிமுகவில் இரட்டை தலைமை என்பது மிகப் பெரும் சர்ச்சைகளை உருவாக்கி கொண்டே இருக்கிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே யாருக்கு ஆதரவு அதிகம்? யார் வலிமையான கோஷ்டி? என்ற போட்டி எழுந்தது.

ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை காலி செய்து விட்டு பழைய பாணியில் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. பொதுச்செயலாளர் பதவியை யார் கைப்பற்றுவது என்பதிலும் ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டது.

 ஜூன் 23 அதிமுக பொதுக்குழு

ஜூன் 23 அதிமுக பொதுக்குழு

இந்நிலையில்தான் சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என்று ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதிமுகவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை தயார் செய்ய குழுவும் ஏற்படுத்தப்பட்டது. அதன்பின்னர்தான் அதிமுகவில் புயல் உருவாக ஆரம்பித்தது.

 கிளம்பியது பூதம்

கிளம்பியது பூதம்

பொதுக்குழு கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டுவர வேண்டும்? என்பது பற்றி ஆலோசிப்பதற்காக ஜூன் 14ஆம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மூத்த தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை தலைமை இருப்பதால் முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்ற சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அ.தி.மு.க.வுக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்ததுபோல ஒற்றைத்தலைமை முறையை கொண்டுவர வேண்டும் என்று பெரும்பாலான மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பற்ற வைத்த ஜெயக்குமார்

பற்ற வைத்த ஜெயக்குமார்

அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை ஏற்படுத்த வேண்டும். ஒருங்கிணைப்பு குழுவை கலைத்துவிட்டு 20 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த ஒற்றைத் தலைமை கோரிக்கை அதிமுகவில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. அனைவரும் ஒற்றைத்தலைமையை விரும்புவதாக கூறி பரபரப்பை பற்ற வைத்தார் ஜெயக்குமார்.

 நிர்வாகிகள் ஆதரவு

நிர்வாகிகள் ஆதரவு

ஒற்றைத் தலைமை வேண்டும் என்று அதிமுகவின் மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றனர். அவர்கள் அதிமுகவில் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்யவும் முடிவு செய்தனர். அது ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கும் நிர்வாகிகள் படையெடுத்தனர்.

ஓ.பன்னீர் செல்வம் உறுதி

ஓ.பன்னீர் செல்வம் உறுதி

எடப்பாடி பழனிசாமியின் இந்த புதிய சமரச திட்டத்தை ஏற்க ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பதவிக்கு வந்துவிட்டால் தனது முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று ஓ.பன்னீர்செல்வம் கருதினார். எனவே தற்போது இருக்கும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவியை விட்டு கொடுக்க அவர் விரும்பவில்லை. அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து செயல்பட விரும்புவதாக ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட கூறியதோடு அ.தி.மு.க. நிர்வாகத்தில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது என்று கறாராக கூறி விட்டார். பத்து நாட்களுக்கும் மேலாக அவரது மனதை மாற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை.

ஹைகோர்ட்டில் வழக்கு

ஹைகோர்ட்டில் வழக்கு

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி அக்கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேஷ் பழனிச்சாமி, தணிகாச்சலம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் கடந்த ஜூன் 22ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தன. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தரப்பில் அஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற உள்ள 23 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் அனுமதிக்க முடியாது எனவும், கட்சி விதிகளுக்கு முரணாக செயல்படப் போவதில்லை எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி கட்சி மற்றும் சங்க விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தலையிடுவதில்லை என தெரிவித்தார். பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது கட்சிதான். அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அதனால் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க நீதிமன்றம் விரும்பவில்லை தெரிவித்து பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கினார்.

விடிய விடிய விசாரணை

விடிய விடிய விசாரணை

இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இரவு 2 மணியளவில் நீதீபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணை நடைபெற்றது. விடிய விடிய விசாரணை
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், திட்டமிட்டபடி பொதுக்குழு நடத்தலாம், அதில் 23 தீர்மானம் மட்டும் நிறைவேற்றலாம், மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாமே தவிர எந்த முடிவும் எடுக்க கூடாது என உத்தரவிட்டனர். இதுதொடர்பான விசாரணை, நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு ஜூன் 23ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி, அதிகாலை 4.30 மணி வரை நடைபெற்றது.

ஜூன் 23 பொதுக்குழு

ஜூன் 23 பொதுக்குழு

பரபரப்பான சூழ்நிலையில் ஜூன் 23 ஆம் தேதியன்று பொதுக்குழு கூடியது. ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பங்கேற்றார். அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். அனைத்து தீர்மானங்களையும் இந்தப் பொதுக்குழு நிராகரிக்கிறது, நிராகரிக்கிறது, நிராகரிக்கிறது என்று சி.வி. சண்முகம் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் "இரட்டை தலைமையால் திமுகவை எதிர்த்து செயல்பட முடியாத நிலை உள்ளது. இரட்டைத் தலைமையின் செயல்பாட்டில் ஒருங்கிணைப்பு இல்லை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலிலதா போன்று ஒற்றைத் தலைமை ஏற்பட வேண்டும். எனவே, பொதுக் குழுவில் இரட்டைத் தலைமை ரத்து செய்து விட்டு ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க வேண்டும். அடுத்து பொதுக்குழு தேதியை அறிவிக்க வேண்டும் என்றார்.

 வெளியேறிய ஓ.பன்னீர் செல்வம்

வெளியேறிய ஓ.பன்னீர் செல்வம்

ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க அடுத்த பொதுக்குழு கூட்ட தேதியை அறிவிக்க வேண்டும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 11ஆம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார். அப்போது, மேடைக்கு வந்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், "சட்டத்திற்கு புறம்பான இந்த தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று ஆவேசமாக அறிவித்துவிட்டு வெளியேறினார். கூட்டத்தில் இருந்து கோபத்தோடு வெளியேறினார் ஓ.பன்னீர் செல்வம். அவர் மீது வாட்டர் பாட்டில் வீசப்பட்டது. அன்று இரவு ஓ.பன்னீர்செல்வம் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். ஜூன் 24 ஆம் தேதியன்று திரௌவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்த நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.

 தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்

தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்

ஜூன் 27 ஆம் தேதியன்று உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இபிஎஸ் தரப்பு மேல் முறையீடு செய்யலாம் என கருதிய ஓ.பி.எஸ் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார். ஜூன் 28 ஆம் தேதியன்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்ட விதத்தை விளக்கி ஓ.பன்னீர்செல்வம் கடிதத்தை அனுப்பினார்.

 உச்சநீதிமன்றத்தில் அப்பீல்

உச்சநீதிமன்றத்தில் அப்பீல்

அ.தி.மு.க பொதுக்குழுவில் 23 தீர்மானம் தவிர வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மறுநாள் ஜூன் 29 ஆம் தேதியன்று பொதுக்குழு விவகாரம் தொடர்பாக நத்தம் விஸ்வநாதன், பெஞ்சமின் ஆகியோர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்

இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்

அன்று எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கட்சியின் A மற்றும் B படிவங்களில் கையெழுத்திட்டு அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஓ பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்திற்கு ஜூன் 30 ஆம் தேதியன்று எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் அனுப்பினார், அதில் ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இல்லை என தெரிவித்திருந்தார்.

தனி தனியே சந்திப்பு

தனி தனியே சந்திப்பு

ஜூலை 2 ஆம் தேதியன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு சென்னையில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது திரௌபதி முர்முவை எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

 உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜூலை 6 ஆம் தேதியன்று அதிமுக பொதுக்குழு தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், பொதுக்குழு நடத்த தடை இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தடை விதித்தும் தீர்ப்பளித்தது. ஜூலை 7 ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுக்குழுவிற்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.

ஜூலை 11 பொதுக்குழு நடத்தலாம்

ஜூலை 11 பொதுக்குழு நடத்தலாம்

ஜூலை 8 ஆம் தேதியன்று 2வது நாளாகத் தொடர்ந்த விசாரணையின் முடிவில், தீர்ப்பு 11 ஆம் தேதியன்று காலை 9 மணிக்கு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். அதன்படி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். அதிமுக கட்சி விதிகளுக்குட்பட்டு பொதுக்குழுவை நடத்த வேண்டும். கட்சியின் உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

16 தீர்மானங்கள்

16 தீர்மானங்கள்

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கூடியது அதில் 16 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பின் நிறைவேற்றப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச்செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்.அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்.அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரை நடைபெறவுள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல்.அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்வது.

கலவரபூமியான அதிமுக அலுவலகம்

கலவரபூமியான அதிமுக அலுவலகம்

ஜூலை 11ஆம் தேதியன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அதே நேரத்தில் அதிமுக அலுவலகத்திற்கு வந்தார் ஓ.பன்னீர் செல்வம். அப்போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தடுக்கவே அதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் உள்ளே சென்றனர். மாறி மாறி கற்கள் வீசப்பட்டன. அதிமுக அலுவலக கதவை எட்டி உதைத்து உடைத்து உள்ளே சென்றனர். இது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தவே அதிமுக அலுவலகத்திற்கு பூட்டி சீல் வைத்தனர்.

 அதிமுக அலுவலக சாவி வழக்கு

அதிமுக அலுவலக சாவி வழக்கு

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை உடனடியாக எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அத்துடன், ஒரு மாதத்திற்கு பிறகுதான் தலைமை கழகத்திற்குள் தொண்டர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற படியேறிய ஓபிஎஸ்

உச்சநீதிமன்ற படியேறிய ஓபிஎஸ்

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஒபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற ஓபிஎஸ்ஸின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. விரிவான விசாரணை மேற்கொள்ளாமல் எந்த இடைக்கால தடையும் விதிக்க முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

 தனி நீதிபதி தீர்ப்பு

தனி நீதிபதி தீர்ப்பு

கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் அம்மன் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தனி நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து தீர்ப்பு வழங்கினார். அதில், அதிமுக பொதுக்குழு செல்லாது. ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையை தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

பொதுக்குழு செல்லும்

பொதுக்குழு செல்லும்

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து காரசாரமாக விவாதங்கள் முன் வைக்கப்பட்டன. அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் இன்று செப்டம்பர் 2ஆம் தேதியன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்புவழங்கப்பட்டுள்ளது . பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு ரத்துசெய்யப்பட்டுள்ளது . ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் இந்த தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வந்துள்ளதால் அவரது வீடு முன்பு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இனிப்புகளை கொடுத்தும் பட்டாசுகளை வெடித்தும் இபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+