தயாரான பட்டியல்.. களமிறங்கிய மாஜிக்கள்! ஓபிஎஸ் பொதுக்குழு நடத்தும் இடம் இதுதானா? ஏற்பாடுகள் தீவிரம்!
சென்னை : அதிமுக பொதுக்குழு விரைவில் நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்திருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை கவனிக்க ஓபிஎஸ் தரப்பில் சில நிர்வாகிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பாஜக தலைமை எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதனை முற்றாக அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாஜக தலைமை போலவே ஓ.பன்னீர்செல்வமும் கடும் அதிருப்தியில் இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அணிகள் இணைப்பை நடத்தி முடித்து விட வேண்டும் என பாஜக தலைமை விரும்புகிறது. ஆனால் தற்போதைக்கு அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

பாஜக தலைமை
ஓபிஎஸ் மட்டுமல்லாது சசிகலா, டிடிவி தினகரன், ஆகியோரை கட்சிக்குள்ளோ அல்லது கூட்டணிக்குள்ளோ கொண்டு வந்தால் அது மேலும் பலம் சேர்க்கும் என்பதாலும் இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெற முடியும் என அந்த கட்சி விரும்புகிறது. ஆனால் மூவரையும் சேர்த்துக் கொள்ள முடியவே முடியாது என நூறு சதவீதம் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இவர்கள் மீண்டும் வர ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை எனவும் கூறி இருக்கிறார்.

உற்சாகம்
அதிமுகவை பொறுத்தவரை அமித் ஷா ஓ பன்னீர் செல்வத்துக்கே ஆதரவளிப்பார் எனவும் பிரதமர் மோடியும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணக்கமாகவே இருக்கிறார். இதனால் வரும் காலங்களில் ஓ பன்னீர்செல்வத்தின் கை ஓங்குவது உறுதி என சமூக வலைதளங்களில் உற்சாகமாக பேசி வருகின்றனர். அதிமுக பொதுக்குழு விரைவில் நடைபெறும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்திருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

புதிய நிர்வாகிகள்
இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புதிய நிர்வாகிகளை நியமிப்பது, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை அதிமுகவில் சேர்த்து புதிய பொறுப்புகளை வழங்குவது, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இருக்கும் நிர்வாகிகளை ஒன்றிணைத்து அவர்களை தனது ஆதரவாளர்களாக மாற்றுவது என பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார். ஏற்கனவே பல கட்ட பட்டியல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இன்னும் அடுத்தடுத்து பட்டியல்கள் வெளியாகவும் இருக்கிறது.

போட்டி அதிமுக
மேலும் போட்டி அதிமுக போல செயல்பட ஏதுவாக தலைமை கழக நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் மாநகர் ஒன்றியம் வட்ட அளவிலான செயலாளர்களை நியமிக்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு நாட்களில் அந்த பட்டியல் ஓ.பன்னீர் செல்வத்தின் ஒப்புதல் பெறப்பட்டு வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். அதற்குப் பிறகு அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் பொதுக்குழு கூட்டமும் நடைபெற இருக்கிறது.

மதுரை - சென்னை
பொதுக்குழு நடக்கும் இடம், தேதி ஆகியவை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுத்து தனது செல்வாக்கை மீண்டும் பெற ஓபிஎஸ் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக அவர் தரப்பில் இருக்கும் இரு மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்.எல்.ஏ. அடங்கிய குழு அமைக்கப்பட்டு பொதுக்குழு நடக்கும் இடத்தை தேர்வு செய்யவுள்ளனர். மதுரை அல்லது சென்னையில் பொதுக்குழு நடக்கும் என்கின்றனர் ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications