மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஆவேசமான அதிமுக.. செப்டம்பர் 16ல் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து செப்டம்பர் 16 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: விடியும், விடியும் என சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்கக் கூடிய செயல்களை மட்டுமே தொடர்ந்து செய்து வருகிறது இந்த விடியா திமுக அரசு.
எதிர்க்கட்சி வரிசையில் திமுக அமர்ந்திருந்த போது 10 ஆண்டுகளாக எதைச் சொல்லியும் மக்களை திசை திருப்ப முடியவில்லை என்ற எண்ணத்தை உள்வாங்கி, பொய்யை சொல்லி மக்களை திசை திருப்பலாம் என எண்ணி, திமுக பல பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து புறவாசல் வழியக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது.
மின் கட்டணத்தை தொடர்ந்து, தமிழகத்தில் பஸ் கட்டணம் உயருமாம்.. சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
மின் கட்டணம்
மின் கட்டணத்தையோ பேருந்து கட்டணத்தையோ பால் விலையையோ உயர்த்த மாட்டோம் என சொல்லி ஆட்சியில் அமர்ந்தவர்கள், வாக்குறுதிகளை காற்றில் எழுதியதாக உண்மைகளை தண்ணீரில் எழுதியதாகக் கருதி தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி, ஏற்கெனவே மிகப் பெரிய துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் தமிழக மக்களை அவர்களுடைய தலையில் ஆயிரம் செந்தேள் கொட்டியதை போல கடுமையான துயரத்தையும் வலியையும் ஏற்படுத்துகிற விதமாக ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்தும் என்பதையும் சொல்லி மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
அமலுக்கு வரும்
இந்த உயர்வு இம்மாதத்தில் இருந்தே அமலுக்கு வரும் என அதிர்ச்சிகரமான செய்தியையும் சொல்லி இருக்கறார்கள். திமுக எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது மின் கட்டண உயர்வுக்கு அதிமுக அரசு எந்தவிதமான முயற்சியையும் எடுக்காத போதே மின் கட்டணத்தை உயர்த்திவிடுவார்கள் என பொய்யான பரப்புரையை ஏற்படுத்தி, அதற்கு எதிராக தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்த திமுக இன்றைக்கு ஆளுங்கட்சியாக வந்த பிறகு மக்கள் நலனை மறந்து இது போன்றதொரு மின் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது.
மக்கள் நலம் மக்கள் நலம்
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார். தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் என புரட்சித் தலைவரின் பாடல் வரிகளுக்கேற்ப ஆட்சியில் இல்லாத போது மக்கள் நலம் மக்கள் நலம் என கபட நாடகத்தை அரங்கேற்றிய திமுக, ஆட்சிககு வந்த பிறகு தம் மக்கள் நலனை மட்டுமே பிரதானமாக கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது. அம்மாவின் நல்லாசியுடன் செயல்பட்ட கழக ஆட்சியில் மின் கட்டணம், பால் விலை , பேருந்து கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட எதையுமே உயர்த்தாமல் மக்கள் நலனை மட்டுமே பிரதானமாகக் கொண்டு மடிக்கணினி, மிதிவண்டி, தாலிக்குத் தங்கம், திருமண நிதியுதவி தொகை, மகப்பேறு நிதியுதவித் தொகை, பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் வழங்கிய அரசு அம்மாவின் அரசு.
விடியா அரசு
மாறாக இந்த விடியா திமுக அரசு அம்மா அரசில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை முடக்கியதோடு சொத்து வரியையும் மின் கட்டணத்தையும் உயர்த்தி இன்றைக்கு மேலும் மக்களை துன்பக் கடலில் ஆழ்த்தி, என்றைக்குமே விடியாது என்ற நிலைக்கு இந்த அரசு சென்று கொண்டிருப்பதை உணர்த்துகிறது. மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள விடியா திமுக அரசைக் கண்டித்தும் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக சாரபில் அமைப்ப ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக செயலாளர்கள் செய்திட வேண்டும்.
கண்டன ஆர்ப்பாட்டம்
மக்கள் நலனை முன் வைத்து கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறவுள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக செயலாளர்களும் கழக நாடாளுமன்ற சட்டசபை உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களும் முன்னாள் நாடாளுமன்ற சட்டசபை உறுப்பினர்களும் தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும். மக்களை பல்வேறு வகைகளில் வாட்டி வதைக்கும் இந்த விடியா திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கல்நது கொள்ள வேண்டும். வரும் 16 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட அறிஞர் அண்ணாவின் 114 பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் வரும் 22 ஆம் தேதி நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.