அ.தி.மு.க முன்னாள் எம்.பி பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கம்.. காரணம் இதுதான்!
சென்னை: கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் முன்னாள் எம்.பி. பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. பரசுராமன் விரைவில் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு. பரசுராமன், கோ. ராஜமோகன், பண்டரிநாதன், ஆர்.எம். பாஸ்கர், கே. அருள்சகாயகுமார் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி பரசுராமன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக இருந்து வந்தார். அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கத்தின் நெருங்கிய ஆதரவாளரான இவருக்கு கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
வைத்திலிங்கமே இவருக்கு எதிராக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தார் பரசுராமன். ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி பேசி இருந்த பரசுராமன், தஞ்சாவூர் மாவட்ட திமுக நிர்வாகிகளை இன்று சந்தித்து பேசினார். இதனால் பரசுராமன் இன்றே திமுகவில் இணைவார் என்று செய்திகள் அடிபட்டன. இந்த நிலையில்தான் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.