மாறிப்போன அதிமுக லெட்டர் பேடு.. தனித்தனியாக களமாடும் ஒபிஎஸ்-ஈபிஎஸ்! இனி என்னாகும்?
சென்னை: ஆட்சியில் இருந்தவரை அதிமுக சார்பில் ஓ பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து தான் ஒவ்வொரு அறிக்கையையும் வெளியிடுவார்கள். ராமர், லட்சுமணன் போல் பேசப்பட்ட இவர்கள், ஆட்சி முடிந்து எதிர்க்கட்சியான பின்னர் கட்சி சார்ந்து முடிவெடுக்கும் விஷயங்களை தவிர மற்ற விஷயங்களை தனித்தனியாக அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள்.
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கைகள் எல்லாம், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தலைமை செயலக முகவரியில் வெளியாகி வருகின்றன.
அதேநேரம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் வெளியிடும் அறிக்கைகள் ஆரம்பத்தில் தனியாக வந்தன. கடந்த மே 23ம் தேதியில் இருந்து அஇஅதிமுகவின் அதிகாரப்பூர்வ லெட்டர் பேடில் வரத்தொடங்கி உள்ளன.

அஇஅதிமுக லெட்டர் பேடு
அந்த லெட்டர் பேடில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தின் முகவரியும், மக்களால நான் மக்களுக்காகவே நான் என்ற ஜெயலலிதாவின் வாசகங்கள் இடம பெற்றிருக்கிறது. அத்துடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியின் பெயர் இல்லை.

ஓ பன்னீர்செல்வம் கடிதம்
அதிமுக லெட்டர் பேடில், அரசுக்கு தான் சொல்ல விரும்பும் கருத்துக்களை முழுமையாக வெளிப்படுத்தி ஓ பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ள வருகிறார். முன்பெல்லாம் அதிமுக சார்பில் அறிக்கைகள் வெளியானால் அதில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கையெழுத்துகள் இருக்கும். இப்போது தனித்தனியாக இருவரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

பிரச்னையை எழுப்புகிறார்கள்
அஇஅதிமக ஆட்சியில் இருந்த வரை கட்சியின் கருத்தாக ஒரே கடிதத்தில் இருவரும் வெளிப்படுத்தி வந்தது, இப்போது திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மக்கள் பிரச்சனைகளில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனியாக குரல்களை எழுப்பினாலும், திமுகவை விமர்சிப்பதிலும், திமுக அரசிடம் கோரிக்கைகள் வைப்பதிலும் ஒரே மாதிரிதான் செயல்படுகிறார்கள்..

எடப்பாடி பழனிசாமி
எனினும் அதிமுகவின் லெட்டர் பேடில் இதுவரையில் எடப்பாடி பழனிசாமி தனியாக அறிக்கை வெளியிடவில்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ பன்னீர்செல்வம் மட்டுமே வெளியிட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி தனது எந்த கோரிக்கையையும், அரசியல் ரீதியாக ஆளும் கட்சி மீதான எந்த விமர்சனத்தையும் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் வைத்து வருகிறார். அதேநேரம் இருவரும் கட்சி சார்ந்த கொள்கை முடிவுகளில் மட்டும் ஒரே அறிக்கை வெளியிடுகிறார்கள். இந்த நடைமுறை தான் இனிஅடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இருக்கும் என தெரிகிறது. கட்சிக்குள் எந்த பிளவையும் எடப்பாடி பழனிசாமியோ, ஓ பன்னீர்செல்வமோ துளியும் விரும்பவில்லை என்பது அவர்களின் இந்த அணுகுமுறை மூலம் தெளிவாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications