அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..எடப்பாடி பழனிச்சாமி போடும் பலே திட்டம் பலிக்குமா?
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி கையெழுத்து வாங்க முடிவு செய்துள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி. ஓ.பன்னீர் செல்வத்தை மொத்தமாக காலி செய்ய திட்டமிட்டுள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: அதிமுகவின் ஒற்றைத்தலைமையாக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி ஓ.பன்னீர்செல்வத்தை மொத்தமாக காலி செய்ய திட்டமிட்டுள்ளாராம்.
அதிமுகவில் கடந்த 1 மாதகாலமாக உட்கட்சி பூசல் பிரச்சினை நீடித்து வருகிறது. அதிமுக அலுவலகத்தில் நடந்த சண்டையால் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையே போர்க்களமானது. நடந்த களேபரத்தால் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அன்றைய தினமே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவிகளை எல்லாம் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து பறித்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

எம்எல்ஏக்கள் கூட்டம்
அடுத்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் பறிக்க முழு மூச்சில் இறங்கி இருக்கிறார். இதற்காக நாளை சென்னையில் அடையாறு நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் 62 எம்எல்ஏக்களிடம் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தில் கையெழுத்து வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

சபாநாயகருக்கு கடிதம்
ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவிகளை பறித்த பின்னர், அடுத்ததாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் தான் கை வைப்பார்கள் என்பதை முன்கூட்டியே உணர்ந்த ஓபிஎஸ், சபாநாயகர் அப்பாவுக்கு அவசரமாக ஒரு கடிதத்தை எழுதியிருந்தார்.

எம்எல்ஏக்கள் கையெழுத்து
எடப்பாடி தரப்பில் தன்னை நீக்கச் சொல்லி கடிதங்கள் அனுப்பினால், அந்த கடிதங்கள் செல்லாது என்று அதற்குரிய விளக்கங்களுடன் அந்த கடிதத்தில் தெரிவித்து இருந்தார் ஓ.பன்னீர் செல்வம். இந்த நிலையில் நாளைய தினம் நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தன்னிடம் இருக்கும் எம்எல்ஏக்களிடம் ஓ.பன்னீர் செல்வத்திடம் இருக்கும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை பறித்து விட கையெழுத்து வாங்க வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் திட்டமாக இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தல்
இந்த நிலையில் நாளை மறுதினம் 18 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்எல்ஏக்கள் ஓட்டு போட இருக்கிறார்கள். அதற்கு முதல்நாளான நாளைய தினம் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டிய கூட்டத்தை கூட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஓ.பன்னீர் செல்வம் எழுதிய கடிதம் பரிசீலனையில் இருப்பதாக கூறியிருக்கிறார் சபாநாயகர் அப்பாவு. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எதுவும் எழுதவில்லை என்றும் கூறியுள்ளார் சபாநாயகர் அப்பாவு. ஓ.பன்னீர் செல்வத்தின் எதிர்கட்சித் துணைத்தலைவர் பதவி தப்புமா? நாளை தெரியவரும்.












Click it and Unblock the Notifications