அதிமுக அலுவலகத்திற்கு சீல்..எம்எல்ஏக்கள் கூட்டத்தை ஹோட்டலில் நடத்தும் எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளைய தினம் அடையாறில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ளது.
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு சென்னை அடையாறு கிரவுண்ட் பிளாசா ஓட்டலில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தல், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தேர்வு பற்றி ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமான நிலையில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Recommended Video

அதிமுக அலுவலகத்திற்கு சீல்
அதிமுக அலுவலகம் முன்பு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். போர்க்களமாக மாறியது ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை. இதனையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

ஓ.பன்னீர் செல்வம்
அதை ஏற்க மறுத்துள்ள ஓ.பன்னீர் செல்வம் தான் அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி, கே.பி முனுசாமியை நீக்குவதாக அறிவித்தார். தன்னை நீக்கியது செல்லாது என்று கூறி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளார். அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் ஜூலை 17ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

ஹோட்டலில் எம்எல்ஏக்கள் கூட்டம்
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் வைத்து கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் வீடு அரசுடையது என்பதால் கட்சி சார்ந்த எம்எல்ஏக்கள் கூட்டம் ஓட்டலில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தல், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தேர்வு பற்றி ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

திரவுபதி முர்முவுக்கு ஆதரவு
திங்கட்கிழமையன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த சூழலில் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

எதிர்கட்சி துணைத்தலைவர் பதவி
இதனிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள ஒ.பன்னீர் செல்வம் எம்எல்ஏவாக இருக்கிறார். எதிர்கட்சி துணைத்தலைவராகவும் இருக்கிறார். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்குவது குறித்தும் ஆலோசனை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications