மதுரை -ராம்நாடு..தயாரான ரூட் மேப்! தர்மயுத்தத்தின் அப்டேட்! நீதிகேட்டு புரட்சி பயணம்! பரபர மீட்டிங்!
சென்னை : அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பொதுக்குழு, நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என எதுவுமே கைகொடுக்காவிட்டால், கடைசி அஸ்திரமாய் மதுரையில் தொடங்கி தனக்கு அதிக ஆதரவுள்ள மாவட்டங்களில் புரட்சி பயணம் மேற்கொள்ள ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாக இதற்கான ஆலோசனை இன்றே தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதன் தொடர்ச்சியாக, அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை கட்சி நிர்வாகிகள் சிலர் முன்வைத்தனர்.
குறிப்பாக சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் சில கட்சி நிர்வாகிகள் குரல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் சசிகலா தரப்பு தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறது.

சசிகலா பயணம்
தற்போது ஒற்றைத் தலைமை விவகாரத்திற்கிடையேயும் தொண்டர்களைச் சந்திப்பதற்காக சசிகலா தனது அரசியல் சுற்றுப் பயணத்தை தி.நகர் இல்லத்திலிருந்து கடந்த வாரம் தொடங்கி இருக்கிறார். அப்போது அங்குக் கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், சசிகலாவிற்கு ஆதரவாகக் கோஷமிட்டும் உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள். சசிகலாவின் அசைவுகளை ஈபிஎஸ் தரப்பினர் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதற்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறீர்களா, இருக்கிறது. அதனை கடைசியில் பார்க்கலாம்..

ஓபிஎஸ் திட்டம்
இந்நிலையில் தற்போது ஓபிஎஸ் அதிமுகவில் தனது பலத்தை நிரூபிக்க தேர்தல் ஆணையம்,நீதிமன்றம் என கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி வருகிறார். உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஏ, பி படிவத்தில் கையெழுத்திடுவதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பு இல்லை என கூறி இபிஎஸ் கடிதத்தை திருப்பி அனுப்பி விட்டார்.

அதிமுக பொதுக்குழு
பொதுக்குழுவுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதற்கான சென்னை வானகரத்தில் ஷங்கர் படத்தில் வருவது போல விண்ணை முட்டும் செட்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பொதுச்செயாளாளர் பதவியை கைப்பற்றியே தீர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரம் காட்டி வரும் நிலையில், அதனை தடுத்தே தீர வேண்டுமென ஒபிஎஸ்ஸும் களமிறங்கியுள்ளார். இதற்காக கடந்த முறை போலவே, தேர்தல் ஆணையம், காவல்துறை, நீதிமன்றம் உள்ளிட்டவற்றை நாடவுள்ளார்.

நீதிகேட்டு புரட்சி பயணம்
இந்த முயற்சிகள் கைகூடாவிட்டால் நிச்சயம் பொதுக்குழுவில் தனக்கு எதிரான முடிவுகளை எடுக்கப்படும் என உணர்ந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது கடைசி அஸ்திரமாக தர்மயுத்தத்தின் அப்டேட் வெர்ஷனான தொண்டர்களிடம் நீதி கேட்டு புரட்சி பயணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மதுரையில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இந்த புரட்சி பயணமானது, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகமாக இருக்கும் எனவும் மற்ற மாவட்டங்களில் ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகளை பொறுத்து அங்கு பயணம் மேற்கொள்வது குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. இதற்காக இன்று ஓபிஎஸ் தரப்பில் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் இறுதி நடவடிக்கையாகவே இது இருக்கும் என அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications