அதிமுக ஆட்சியில் அரைகுறை வேலை...10 ஆண்டுகளாக எதுவுமே செய்யவில்லை - முதல்வர் ஸ்டாலின் புகார்
அதிமுக ஆட்சியில் செய்த அரைகுறை வேலைகளாலும் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் நடைபெற்ற ஊழலுமே சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட காரணம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எதுவும் செய்ததால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அரைகுறையாக நடந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளால் தான் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடக மாறியுள்ளன. மழை விட்டு விட்டு பெய்து வருவதால் வெள்ளம் வடியாமல் பல பகுதிகள் குளம் போல தேங்கியுள்ளன.
வெள்ளநீர் எளிதில் வடியும் பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளதால் ஏராளமானோர் தத்தளித்து வருகின்றனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் நான்கு நாட்களாக வெள்ளத்திலும் இருளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு
முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த நான்கு நாளாகவே வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார். நான்காம் நாளான இன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் கனமழை பாதித்த பகுதிகளில் கொட்டும் மழையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடப்பதாக கூறினார்.

லஞ்ச ஊழல்
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி பணிகளில் லஞ்சம், ஊழல் நடந்ததால் தியாகராய நகருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எதுவும் செய்ததால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரைகுறையாக நடந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளால் தான் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.

அனைத்தும் நடக்கிறது
வாக்களித்த மக்களுக்கு எந்த நோக்கத்துக்கு வாக்களித்தார்களோ அதை செய்வோம் என்று கூறிய முதல்வர், நிவாரணப்பணிகளை தொடர்ந்து செய்வோம் என்றார். கொட்டும் மழையில் ஆய்வு செய்வது எனக்கு புதிதல்ல, மழை பெய்தால் எங்கே அடைப்பு வரும் எனத்தெரியும் அதை ஆராய்ந்து செய்து வருகிறோம். அனைத்துப்பணிகளும் நடக்கிறது என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார்.

முதல்வர் பதிலடி
சென்னை மேயராக இருந்த மு.க ஸ்டாலின் எந்த பணிகளையும் செய்யவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் குற்றம் சாட்டினார். அதற்கு பதிலடி தரும் வகையில் இன்றைய தினம் பேட்டியளித்த முதல்வர் மு.க ஸ்டாலின், 10 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் லஞ்சம் வாங்கி ஊழலில் திளைத்ததால் தான் இப்பொழுது இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications