அதிமுக அவைத்தலைவரின் ஆன்மிக பயணம்! எடப்பாடிக்காக தர்ஹா.. தர்ஹாவாக செல்லும் தமிழ் மகன் உசேன்!
சென்னை: தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் எனவும் பிரார்தித்து தர்ஹாகளுக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் சென்று வருகிறார் அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன்.
இதுவரை அதிமுக அவைத் தலைவராக இருந்தவர்கள் யாரும் செய்யாத ஒன்றை எடப்பாடிக்காக தமிழ் மகன் உசேன் செய்து வருகிறார்.
ஏர்வாடி, முத்துப்பேட்டை, கோவளம், ஆற்றங்கரை என தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அனைத்து தர்ஹாக்களுக்கும் ஒரு விசிட் அடித்துவிட்டார் தமிழ் மகன் உசேன்.
TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. வெளியான ‛சூப்பர்’ அறிவிப்பு
வக்பு வாரியத் தலைவர்
அதிமுகவில் எம்.ஜி.ஆர்.காலத்து சீனியரான தமிழ் மகன் உசேன் அக்கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர். ஜெயலலிதாவை பார்க்க ஆட்டோவில் சென்ற இவர், அடுத்த நாளே அரசுப் பதவியில் வக்பு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டு அரசு வாகனத்தில் பவனி வந்தவர். கட்சி மீதும் எம்.ஜி.ஆர் மீதும் கொண்ட விசுவாசம் காரணமாக அதிமுக தொடங்கப்பட்ட காலம் முதல் அதில் பயணித்து வரும் இவர் இப்போது அக்கட்சியின் அவைத்தலைவராக உள்ளார்.
சிறப்பு துஆ
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்காக தமிழகம் முழுவதும் உள்ள் தர்ஹாக்களுக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் சென்று வருகிறார். மதுரை கோரிப்பாளையம், ஏர்வாடி, முத்துப்பேட்டை, கோவளம், ஆற்றங்கரை என தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அனைத்து தர்ஹாக்களுக்கும் ஒரு விசிட் அடித்துவிட்ட இவர், செல்லும் இடங்களிலெல்லாம் எடப்பாடிக்காக சிறப்பு துஆ செய்து தனது விசுவாசத்தை தலைமைக்கு தெரியப்படுத்தி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஏன் இந்த பாசம்?
எடப்பாடி பழனிசாமிக்காக இந்தளவு விழுந்து விழுந்து இவர் பிரார்தனை செய்வதற்கான காரணம் பற்றி நாம் விசாரித்ததில், அதிமுக அவைத் தலைவராக தற்காலிக நியமனத்தில் இருந்த இவரை எடப்பாடி தான் முறைப்படி அவைத் தலைவராக்க நடவடிக்கை எடுத்தார் என்பது தானாம். இதனால் தான் தனது விசுவாசத்தை இது போன்ற நிகழ்வுகள் மூலம் உணர்த்தி வருகிறாராம். இதனிடையே தர்ஹா வாசல்களில் நின்று கொண்டு இவர் கொடுக்கும் பேட்டிகள் தான் சற்று ஓவர் டோஸாக இருக்கிறது.
நடத்துநர்
அரசுப் பேருந்து நடத்துநராக இருந்து எம்.ஜி.ஆருக்காக அரசுப் பணியை உதறிவிட்டு அரசியலுக்கு வந்தவர் தமிழ் மகன் உசேன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் பாளையங்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட சீட் வழ்ங்கப்பட்டு ஒரே வாரத்தில் அதை திரும்பபெற்று வேறொருவரை அங்கு வேட்பாளராக்கினார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். காலம் தொட்டு அரசியலில் இருந்து எம்.பி., எம்.எல்.ஏ. என எந்தப் பதவியிலும் தமிழ் மகன் உசேன் இருந்ததில்லை எனக் குறிப்பிடத்தக்கது.