ஒரே நாளில்.. ஒரே நேரத்தில்.. "2 கொங்கு மாஜி".. சிக்குகிறார்களா விஜயபாஸ்கர், வேலுமணி? என்ன நடக்கிறது?
எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் ஒரே நேரத்தில் ரெய்டுகள் நடந்து வருகிறது
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் இருவரிடமும் ஒரே நேரத்தில் ரெய்டு நடந்து வருவது, அரசியல் களத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தற்போது தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்..
அத்துடன் கொங்கு மண்டலத்தின் மிக முக்கிய புள்ளியாகவும், எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமாகவும் திகழ்ந்து வருகிறார்.
அதிகாலையிலேயே அதிரடி.. அதிமுக மாஜிக்கள் விஜயபாஸ்கர், வேலுமணி வீடுகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு
நெருக்கம் + சிக்கல்
இவர் கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்திற்கான ஒப்பந்தங்களின்போது மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்ததாகவும், தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்தப்பணி வழங்கிய வகையில் அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. இதனடிப்படையில், கோவை மாவட்டம் சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்...
ரெய்டு
சென்னையில் அவர் தொடர்புடைய 10 இடங்கள், கோவையில் தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட 9 இடங்கள், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 7 இடங்கள் என மொத்தம் 26 இடங்களில் சோதனை நடக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, சேலம், மதுரை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 13 இடங்களில் சோதனை நடக்கிறது...
விஜயபாஸ்கர்
திருவள்ளூர் மாவட்டத்தில், வேலன் நகரில் செயல்படும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இரண்டு வருடங்களாக செயல்படுவதாகவும், இந்த மருத்துவமனையில், புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என்று தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கும் முரணாக சர்டிபிகேட் வழங்கியுள்ளதாக புகார் எழுந்திருக்கிறது. அது சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 5 இடங்களிலும் சேலத்தில் 3 இடங்களிலும் மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் தாம்பரத்தில் உள்ள இடங்களில் என மொத்தம் 13 இடங்களிலும் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இடியாப்ப சிக்கல்
இப்படி, வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது தற்போது மூன்றாவது முறையாக இந்த சோதனை நடைபெறுகிறது. அதேபோல, சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் தற்போது இரண்டாவது முறையாக சோதனை நடைபெறுவது அரசியல் களத்தில் கவனத்தை பெற்று வருகிறது.. அத்துடன், ஒரே நாளில் ஒரே நேரத்தில், இந்த 2 மாஜிக்களிடமும் ரெயிடு நடந்து வருவதும் அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
வேலுமணி ஜம்ப்?
இரு மாஜிக்களின் மீதும் கடந்த காலங்களில் இருந்தே புகார்கள் எழுந்தபடியே இருந்தன.. ஆட்சிக்கு வந்தால், நிச்சயம் அதிமுக தலைவர்களின் ஊழல்களை அம்பலப்படுத்துவோம், சட்டப்படி நடவடிக்கை எடுத்தே தீருவோம் என்று திமுக தலைவரான முக ஸ்டாலின் தன்னுடைய பிரச்சாரங்களில் தொடர்ந்து கூறிவந்தார்.. அதிகார துஷ்பிரயோஷம், பழிவாங்கும் நடவடிக்கை என அதிமுக தரப்பில் இதனை விமர்சித்தாலும், எதையும் சட்டப்படி ஆராய்ந்து அணுகி வருகிறது திமுக அரசு. ஒருகட்டத்தில், திமுக பக்கம் வேலுமணி தாவுவதற்கு முயற்சி செய்வதாகவும், இதற்காக மேலிட உதவியை அணுகி வருவதாகவும்கூட உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.
தலைக்கு மேல் கத்தி
அதேபோல, விஜயபாஸ்கரை பொறுத்தவரை ஏற்கனவே, குட்கா விஷயத்தில் வசமாக சிக்கி உள்ளார்.. இதுபோக, ஜெ.மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை தாக்கல் செய்திருந்த நிலையில், ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைத்த பெயர்களில் விஜயபாஸ்கரின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.. இதுபோன்ற அறிக்கையின் அடிப்படையில், தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அரசு மேல் விசாரணையை தொடர முடியும் என்பதாலும், குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த ஆணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு எல்லாவிதமான அதிகாரமும் உள்ளது என்பதாலும் விஜயபாஸ்கர் கலங்கி போய் உள்ளதாக தகவல்கள் கசிந்தன.
ரகசியங்கள்
இதற்கு நடுவில், சுகாதார அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரின் கட்டுப்பாட்டில்தான் அப்பல்லோ மருத்துவமனை அன்று இருந்தது. அவர்தான் ஆதிக்கம் செலுத்தியவர்... ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள், அப்பல்லோவில் நடந்த ரகசியங்கள் என அனைத்தையும் அறிந்த ஒரே நபர் விஜயபாஸ்கர்தான் என்று பெங்களூர் புகழேந்தி கொளுத்தி போட்டுவிட்டுள்ளார்.. இப்படி நாலாபக்கமும் விஜயபாஸ்கருக்கு நெருக்கடிகள் கூடிவரும் நிலையில், எடப்பாடி தரப்பு தன்னை கைவிட்டுவிட்டதாகவும் அவர் புலம்பி வருவதாகவும் கூறப்பட்டது.
டாக்குமெண்ட்டுகள்
இந்நிலையில், கொங்கு மண்டலத்தை சேர்ந்த 2 மாஜிக்களிடம் ரெய்டு நடந்து வருவது பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ரெய்டுகள் நடந்தாலும், சில முக்கிய டாக்குமெண்ட்கள் சிக்கியதாக கூறப்பட்டாலும், இதுவரை அதிமுக மாஜிக்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.. அதேசமயம், வலுவான ஆதாரங்களையும் கைப்பற்ற அதிகாரிகள் முயன்றுவருகிறார்கள்.. அந்தவகையிலேயே இந்த ரெய்டு நடப்பதாக தெரிகிறது.. ஏதாவது முக்கிய ஆவணங்கள் இந்த ரெய்டில் சிக்கும் பட்சத்தில், இரு மாஜிக்களுக்குமே நெருக்கடிகளும், சிக்கல்களும் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது..