ஓயாத ஒற்றைத்தலைமை விவகாரம்..ஓபிஎஸ் இன்றும் ஆலோசனை..எடப்பாடியும் விட தயாரில்லை
ஒற்றைத்தலைமை விவகாரம் அதிமுகவில் சூடுபிடித்துள்ள நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஐந்தாவது நாளாக இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை பேசு பொருளாக மாறிய நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இன்றும் தனது வீட்டிலும் பின்னர் பிரபல நட்சத்திர விடுதியிலும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக பொதுசெயலாளராக சசிகலா பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ் ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் மேற்கொண்டு சசிகலா மற்றும் தினகரனுக்கு எதிராக புகார் தெரிவித்தார். இதனையடுத்து ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டார்.
அப்போது சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததையடுத்து சசிகலா சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டதால் இபிஎஸ் முதல்வரானார்.+

இணைந்த ஓபிஎஸ் இபிஎஸ்
தனித்தனி அணியாக செயல்பட்ட நிர்வாகிகள் மீண்டும் இணைய சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிமுகவில் இணைவது குறித்து ஓபிஎஸ் அணி இபிஎஸ் அணியுடன் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் இபிஎஸ் உடன் கரம் கோர்த்தார் ஓபிஎஸ். அதே நேரத்தில் சசிகலாவிற்கு வழங்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரட்டை தலைமை
தொடர்ந்து அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு ஆட்சியும் கட்சியும் இயங்கி வந்தது. இதனையடுத்து இரட்டை தலைமையின் கீழ் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்தது.

ஒற்றைத்தலைமை கோரிக்கை
இரட்டை தலைமையால் உடனடியாக முடிவு எடுக்க முடியவில்லையென்றும், கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றால் ஒற்றை தலைமை தான் அவசியம் என அதிமுக நிர்வாகிகள் கூற தொடங்கினர். இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.

போஸ்டர் யுத்தம்
இதனையடுத்து ஒற்றை தலைமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியது பரபரப்பை பற்ற வைத்தது. சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்ட நிலையில் தென் மாவட்டங்களில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. தீவிரமாக களத்தில் இறங்கி தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டினர். ஒற்றை தலைமை ஓபிஎஸ் எனவும் அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

பரபர ஆலோசனை
இதனையடுத்து அதிமுக மூத்த நிர்வாகிகள் இரண்டு தரப்பிலும் ஆலோசனை நடத்தினர். நான்காவது நாளாக நேற்று ஆலோசனை மேற்கொண்டார் ஓ.பன்னீர் செல்வம். சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தம்பி துரை, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒற்றைத்தலைமை என்பது அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பை எச்சரிக்கும் விதமாக பேட்டியளித்தார் வைத்திலிங்கம்.

இன்றும் ஆலோசனை
இந்த நிலையில் இன்றும் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில், தனது ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம், பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியின் திட்டத்தை முறியடிப்பதா அல்லது தனி பொதுக்குழுவை கூட்டுவதா என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை
அதிமுகவில் பல வித பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வருகின்றன. ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு, ஓபிஎஸ் வெளிப்படையாகவே நேற்று முன்தினம் தனது நிலைப்பாட்டை தெரிவித்து விட்டார். இதனால் எடப்பாடி அணியினர் கலக்கம் அடைந்துள்ளனர். இதையும் மீறி ஒற்றைத் தலைமை பிரச்னையை பொதுக்குழுவில் கிளப்பினால், அதிமுக இரண்டாக உடையும். சின்னம், கொடி முடக்கப்படும் ஆபத்து உள்ளதாக எடப்பாடி அணியினர் யோசிக்க தொடங்கியுள்ளனர். இதனால், ஒற்றைத் தலைமை பிரச்சனையை சுமுகமாக பேசி முடிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். இதற்காக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இன்றும் அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications