‘சசிகலாவுக்கு துரோகம் செய்த எடப்பாடி' பிளேட்டை திருப்பிப் போட்ட வைத்தியலிங்கம்! அப்போ அது தானா?
சென்னை : பொதுக்குழு தீர்மானங்கள் எதுவும் என்னைக் கட்டுப்படுத்தாது எனவே அவற்றை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று, தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளதாக, அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வுக்கு முன்னதாக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமையக கதவை உடைத்து உள்ளே நுழைந்தார். இந்நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ் நீக்கப்பட்டதாக பொதுகுழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு
ஆனால் இது செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், " கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் இந்த கட்சியை ஆரம்பித்தபோது, இயற்றிய சட்டவிதிகளின்படி, அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

வைத்திலிங்கம் பேட்டி
இதன் அடிப்படையில்தான், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஒரு வாக்கின் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.இதனை பொதுக்குழு நீக்க முடியாது. எனவே நேற்று பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட எந்த தீர்மானமும் செல்லாது. இன்றுவரை தேர்தல் ஆணையத்தில், ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம்தான். எனவே பொதுக்குழு தீர்மானங்கள் எதுவும் என்னைக் கட்டுப்படுத்தாது.

தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்
எனவே அவற்றை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று, தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளர். இனிமேல் கட்சியில் பொதுச் செயலாளர் என்ற பதவியே இல்லை. எனவே, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர், ஓபிஎஸ் மீது குற்றம் சுமத்துவது ஏற்புடையதாக இல்லை.

சசிகலாவுக்கு துரோகம்
எப்படி இவரை முதல்வராக்கிய சசிகலாவுக்கு துரோகம் செய்தார். இவர் ஆட்சி செய்ய நான்கரை ஆண்டுகாலம் உறுதுணையாக இருந்த ஓபிஎஸ்க்கும் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்கிறார். ஓபிஎஸ் கட்சி அலுவலகத்திற்கு செல்கிறார். நாங்கள் இந்தியன் வங்கி அருகே செல்லும்போதே, கற்கள், பாட்டில், அருவா, கட்டைகளை வீசுகின்றனர். எடப்பாடி பழனிசாமி தரப்பினர், கடந்த 5 நாட்களாக ரவுடிகளை கட்சி அலுவலகத்தில் வைத்து அட்டூழியம் செய்தது. எனவே எங்களை குறை சொல்வதற்கு அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை" என கூறினார்.

மீண்டும் சந்திப்பு?
பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக தஞ்சையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான வைத்திலிங்கம் அமமுக நிர்வாகிகளுடன் மிகவும் நெருக்கம் காட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்ட நிலையில் ஒருவருக்கொருவர் ஆறத் தழுவி அன்பை வெளிப்படுத்தியது அதிமுக அமமுக வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியது. சசிகலாவும் கட்சியை இணைப்பேன் என கூறியுள்ள நிலையில், சசிகலாவுக்கு துரோகம் செய்தார் எடப்பாடி என அவருக்கு ஆதரவாக பேசியிருப்பது மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கூட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications