கறுப்பு பேட்ச்... தர்ணா...வெளிநடப்பு - சட்டசபையில் சரியாக செயல்படாத அதிமுக, ஸ்கோர் செய்த பாஜக
தமிழக சட்டசபையில் கறுப்பு பேட்ச் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தது தவிர எதிர்கட்சியாக அதிமுக செயல்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதே நேரத்தில் பாஜகவினர் எதிர்கட்சி போல செயல்பட்டுள்ளதாகவும் அரசியல் நோக
சென்னை: தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது பிரதான எதிர்கட்சியான அதிமுக எம்எல்ஏக்கள் பெரிய அளவில் செயல்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. கறுப்பு பேட்ச் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தது தவிர பெரிதாக எதுவும் செய்யவில்லை என்றும் அதே நேரத்தில் 4 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ள பாஜகவினர் எதிர்கட்சி போல செயல்பட்டுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கலுடன் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. 14ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதங்களுக்குப் பிறகு மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்ற பின்னர் செப்டம்பர் 13 பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்துள்ளது.
கையில் 3 வயது குழந்தை.. திடீரென இளம்பெண் செய்த பகீர்.. அரண்டு போன தர்மபுரி கலெக்டர் ஆபிஸ்!
கொரோனா பாதுகாப்பு விதிமுறைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் ஒரு மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பிரதான எதிர்கட்சியான அதிமுகவின் செயல்பாடு பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்று சட்டசபை நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்த அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல் நாளே அமளி துமளி
சட்டசபையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பேச அனுமதி வழங்க வேண்டும் என்று அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். மைக் கொடுக்க சொல்லி முழக்கமிட்டனர். அப்போது சபாநாயகர் அப்பாவு, திங்கள் அன்று பொதுவிவாதம் நடைபெறும் அப்போது பேசலாம் என்று அறிவுறுத்தினார். அனைவரையும் இருக்கையில் அமர சொல்லியும், அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட் உரையை புறக்கணித்து விட்டு அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
புயலைக் கிளப்பிய கொடநாடு விவகாரம்
பட்ஜெட் உரையை புறக்கணித்த அதிமுகவினர் அடுத்து கையில் எடுத்தது கொடநாடு பிரச்சினை. 18ஆம் தேதி சட்டசபைக்கு வரும் போதே கறுப்பு பேட்ச் அணிந்து வந்தனர் அதிமுகவினர். ஓபிஎஸ் மட்டும் கறுப்பு பேட்ச் இல்லாமல் வந்திருந்தார். கொடநாடு கொலை,கொள்ளை வழக்கினை மீண்டும் விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதோடு இரண்டு நாட்கள் சட்டசபைக் கூட்டத்தொடரை புறக்கணித்தனர்.
மத்திய அரசுக்கு எதிரான தீர்மானங்கள்
மத்திய அரசுக்கு எதிராக மூன்று முக்கிய தீர்மானங்களை சட்டசபையில் ஆளும் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை எதிர்த்து முதலில் பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில் அதைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர். தீர்மானத்திற்கு எதிராகவோ, ஆதரவாகவோ ஆக்கப்பூர்வமாக விவாதம் செய்யாமல் அதிமுக அன்றைய தினம் வெளிநடப்பு செய்தது. நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் இடையே இறைவனின் சிரிப்பு இதுதான் என் நிலை என்று சூசகமாக பேசினார் சட்டசபை துணை எதிர்கட்சித்தலைவர் ஓ.பன்னீர் செல்வம்.
விவாதம் செய்யாத அதிமுக
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, அன்றைய தினமும் அந்த தீர்மானத்தை ஆதரித்தோ எதிர்த்தோ விவாதம் செய்யாமல் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் முடக்கப்படுவதாக கூறி வெளிநடப்பு செய்தனர். குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து பாஜக உறுப்பினர்கள் தங்களின் கருத்தை சட்டசபையில் பதிவு செய்த பின்னரே வெளிநடப்பு செய்தனர்.
கடைசி நாளும் கறுப்பு பேட்ச்
சட்டசபை நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்றும் கறுப்பு பேட்ச் அணிந்து அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்றனர். அவை கூடிய சில நிமிடங்களிலேயே நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன் மொழிந்தார். சட்டம் ஒழுங்கு சரியில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பேச வாய்ப்பு இல்லை என்று கூறி எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் மக்களின் பிரச்சினைக்காக ஆக்கப்பூர்வமாக விவாதம் நடத்துவதை விடுத்து வெளிநடப்பு செய்ததும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அதிமுகவினர் தொகுதி பிரச்சினை
அதிமுகவில் 60க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் பலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சர்களாக இருந்தவர்கள் மீண்டும் வெற்றி பெற்று எம்எல்ஏக்களாக சட்டசபைக்கு வந்துள்ளனர். அவர்களில் பலர் தங்களின் தொகுதி பிரச்சினை குறித்து பேசினர். அமைச்சராக இருந்த நீங்களே உங்களின் தொகுதி பிரச்சினையை இத்தனை ஆண்டுகாலமாக நிறைவேற்றவில்லையா என்று தற்போது அமைச்சர்கள் பதில் கொடுத்தனர்.
நான்கு எம்எல்ஏக்கள் நச் விவாதம்
நான்கு பாஜக எம்எல்ஏக்கள் தங்களின் தொகுதி பிரச்சினை குறித்து பேசியதோடு, ஆளும் கட்சியை அவ்வப்போது பாராட்டினர். அதே நேரத்தில் மத்திய அரசுக்கு எதிரான தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி தங்களின் கருத்தை சட்டசபையில் பதிவு செய்தனர். மொத்தத்தில் நான்கு எம்எல்ஏக்களைக் கொண்ட பாஜகவினர்தான் உண்மையான எதிர்கட்சியாக செயல்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்து கூறியுள்ளனர்.