ஜஸ்ட் வெற்றியெல்லாம் கிடையாது.. 125 கிடைக்குமாம்.. அதிரடி சர்வே.. அதிமுக ஹேப்பி!
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் 125 இடங்களில் வெற்றி பெற்று அ.தி.மு.க மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்துள்ள சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளன.
தமிழக அரசின் நிர்வாக திறனுக்காக கிடைத்த விருதுகள் மற்றும் 2,500 ரூபாய் பொங்கல் பரிசு ஆகியவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை அதிகரித்துள்ளதாகவும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.
2021 - தமிழக சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கப் போவது எந்த கட்சி என்று தமிழகம் முழுவதும் ஜியோன் ஆய்வு அமைப்பு (Zion Research) என்ற தனியார் ஆய்வு நிறுவனம் சர்வே நடத்தியுள்ளது.

சர்வே முடிவுகளில் சாதகம்
இந்த சர்வே முடிவுகள் குமுதம் ரிப்போர்ட்டர் வாரஇதழில் வெளிவந்துள்ளது. தமிழகம் முழுவதும் 58,500 பேரை நேரில் சந்தித்து இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. இதில் அ.தி.மு.க 45% வாக்குகளை பெற்று 125 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளன.

திமுகவுக்கு எதிர் வரிசையே
அதே சமயம், 44% வாக்குகளுடன் 109 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சர்வேயில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இமேஜ் மக்களிடத்தில் பன்மடங்கு கூடியுள்ளதாக தெரியவந்துள்ளது. முதலமைச்சர் பயன்படுத்தும் வார்த்தைகளான "நானும் ஒரு விவசாயி" என்பது மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

முதல்வர் செல்வாக்கு அதிகரிப்பு
சாமானியராக அனைவரிடமும் முதல்வர் பழகி வருவதாகவும் எளியவர் ஒருவர் முதல்வராக வந்திருப்பதாகவும் மக்கள் தங்களது கருத்துகளை சர்வேயில் தெரிவித்துள்ளனர். 2019 நாடாளுமன்ற தேர்தலில் இருந்த நிலை தற்போது முற்றிலும் மாறி மக்கள் மத்தியில் அ.தி.மு.கவின் செல்வாக்கும் மிகப் பெரிய அளவு கூடியுள்ளதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

முதல்வரின் திறமை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அவர் திறமையுடன் சிறப்பாக நிர்வாகம் செய்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்கியது மக்களிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான மதிப்பை அதிகரித்துள்ளது. மேலும், கஜா, நிவர் போன்ற இயற்கை சீற்றங்களை எதிர் கொண்டது, கொரோனாவை திறம்பட எதிர்கொண்டது ஆகியவை முதலமைச்சரின் திறமைக்கு சான்றாக தமிழக மக்கள் தெரிவித்துள்ளனர்.

வெற்றி நடை போடும் தமிழகம்
மண்டல வாரியாக கட்சிகளின் வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை சென்னை, டெல்டா மற்றும் தெற்கு மண்டலங்களில் தி.மு.கவும், வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்தில் அ.தி.மு.கவும் முன்னிலை பெறும் என்றும் சர்வே முடிவுகள் தெரிவிக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசில் மக்கள் "மிக மகிழ்ச்சி" என்று 41% மக்களும், "மகிழ்ச்சி" என்று 26% மக்களும் தெரிவித்துள்னர். இது தமிழக அரசின் "வெற்றி நடை போடும் தமிழகம்" என்ற பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருத்தப்படுகிறது.

பின்புலம் இல்லாதவர்
சட்ட மன்ற தேர்தலுக்கு பின் முதலமைச்சராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு, 42% பேர் ஸ்டாலின் என்றும் 41% பேர் எடப்பாடி பழனிசாமி என்றும் தெரிவித்துள்ளனர். ஸ்டாலினுக்கு கருணாநிதியின் மகன் என்ற பின்புலமும் பிம்பமும் உள்ளது, அதுவே எந்தவொரு பின்புலமும் பிம்பமும் இல்லாமல் கட்சியின் கடைக்கோடி தொண்டனாக இருந்து முதலமைச்சராக உயர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமியை மக்கள் தங்களில் ஒருவராக பார்க்கின்றனர் என்பது இந்த சர்வே முடிவுகள் மூலம் புலப்படுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications