அரசியலில் இதெல்லாம் சகஜம்.. எங்க இடத்தை நாங்க பிடிப்போம்... சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்
பெயரை மாற்றியாவது தாலிக்கு தங்கம் கொடுங்கள் என்று தமிழக அரசிற்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: அரசியலில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்றும் எங்களின் இடத்தை நாங்கள் பிடிப்போம் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை ஆகிய திட்டங்கள் மீண்டும் தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக அரசியலில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது தேமுதிக. 2011ஆம் ஆண்டு அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது. எதிர்கட்சித்தலைவரான விஜயகாந்த் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக உடனே மோதல் போக்கை கடைபிடித்தார்.
கூட்டணி முறியவே, படிப்படியாக கட்சி கரைய ஆரம்பித்தது. எம்எல்ஏக்கள் பலர் அணி மாறினர். 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்தை முதல்வராக முன்னிறுத்தி தனி அணியாக போட்டியிட்டது தேமுதிக. எல்லோருமே டெபாசிட் இழந்தனர். விஜயகாந்த் படுதோல்வியடைந்தார். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தேமுதிக இருந்த இடம் இல்லாமல் போய் விட்டது.

பிரேமலதா விஜயகாந்த்
விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார். பிரேமலதாவும் அவரது மகனும்தான் கட்சியை கவனித்துக்கொள்கின்றனர். இந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருவோம் எங்கள் இடத்தை நாங்கள் பிடிப்போம் என்றும் நம்பிக்கையுடன் செல்லும் இடங்களில் எல்லாம் கூறி வருகிறார் பிரேமலதா விஜயகாந்த்.

திண்டுக்கல் விழா
திண்டுக்கல்லில் நடைபெற உள்ள கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்துக் கொள்வதற்காக, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்தார். செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாமானிய மக்களை பாதிக்கும். இது எந்த விதத்திலும் நியாயமில்லை. கொரோனா காலகட்டத்தில் பலர் வேலையிழந்து உள்ள நிலையில், அனைத்து விலைவாசியும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு
கேஸ் விலை உயர்வு, மக்களை அதிகமாக பாதிக்கும். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும். அரசு, சுமைகளை மக்கள் மீது சுமத்த கூடாது. மக்களுக்காகத்தான் அரசு உள்ளது என்றார். திமுக, அதிமுக அடுத்தபடியாக தேமுதிக என்று இருந்த நிலையில் தற்போது அந்த கட்சி தோல்வி அடைந்துள்ளதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

வெற்றி தோல்வி சகஜம்
அதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த் "எல்லாக் கட்சியும் அப்படித்தான். வெற்றியும் தோல்வியும் சகஜம். 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத கட்சி, தற்பொழுது ஆட்சியில் உள்ளது. ஆட்சியில் இருந்த கட்சி, தற்போது ஆட்சி இல்லாமல் இருக்கிறது. அரசியலில் இதெல்லாம் சகஜம். எங்கள் இடத்தை நாங்கள் பிடிப்போம்" என்று தெரிவித்தார்.

தாலிக்குத் தங்கம்
பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை ஆகிய திட்டங்கள் மீண்டும் தொடர வேண்டும். பெண்களுக்கான எந்த திட்டத்தையும் இந்த அரசு நிறுத்தி வைக்கக்கூடாது. அம்மா உணவகத்தை, கலைஞர் உணவகம் என்று மாற்றியதை போல, ஆளுங்கட்சிக்கு ஏற்றமாதிரி திட்டத்தின் பெயரை மாற்றியாவது இத்திட்டத்தைத் தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications